கர்நாடகா மற்றும் கேரளம் மாநிலங்களில் மழை தீவிரமடைந்ததன் காரணமாக கபினி அணையில் இருந்து கடந்த 1-ந் தேதி வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் இரவு மேட்டூர் அணையை வந்தடைந்தது.
இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது. அதாவது நேற்று முன்தினம் காலை 73.02 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 74.01 அடி யாக உயர்ந்தது.
இதன் எதிரொலியாக மாலை 4 மணி நிலவரப்படி 74.55 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் அணை நீர்மட்டம் மீண்டும் படிப்படியாக உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




















