தமிழக அரசு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி அறிவித்துள்ள நிலையில், இந்த உயர்வு போதாது எனக் கூறி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பால் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதால், கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
லிட்டருக்கு மேலும் ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும் என்பது பால் உற்பத்தியாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உற்பத்தியாளர்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில், கூட்டுறவு சங்கத்திற்கு பால் வழங்குவதை புறக்கணித்த உற்பத்தியாளர்கள், பெரம்பலூர்–ஆத்தூர் சாலையில் பாலை கீழே ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி வடக்காடு பகுதியிலும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் முன்பு பாலை கீழே ஊற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பணிக்கம்பட்டி பகுதியில், ஆவின் கூட்டுறவு சங்கத்திற்கு பால் வழங்குவதை புறக்கணித்து, தனியார் நிறுவனத்திற்கு பால் வழங்கினர். பால் கொள்முதல் விலையை அரசு மேலும் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


















