அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை எல் நினோ தாக்கம் நீடிப்பதற்கு 100 சதவீத வாய்ப்புள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் வரும் குளிர்காலம் வழக்கத்தை விட வெப்பமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்வால் உருவாகும் எல் நினோ, உலகின் பல பகுதிகளில் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் இயற்கை காலநிலை நிகழ்வாகும். இந்த ஆண்டின் இறுதியில் எல் நினோ தாக்கம் உச்சத்தை அடையக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
எல் நினோ காரணமாக சில பகுதிகளில் மழைப்பொழிவு குறையவும், சில பகுதிகளில் அதிக மழை மற்றும் வெப்ப அலைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மழை மற்றும் வெப்பநிலையின் சீர்குலைவுகள் 2027-ம் ஆண்டு வரையிலும் தொடரக்கூடும் என்பதால், விவசாயம், நீர்வள மேலாண்மை மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.


















