டெல்லியில் ஓடும் தனியார் ஸ்லீப்பர் பேருந்தில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்த சிறுமி, குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறியதாகவும், நொய்டாவில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்லும் வழியில் தவறுதலாக கிரேட்டர் நொய்டா பகுதியில் இறங்கியதாகவும் கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த காலியான ஸ்லீப்பர் பேருந்தில் உதவி கேட்டு ஏறிய சிறுமியை, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் சுமார் 47 கி.மீ. தூரம் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியை, காஷ்மீரி கேட் பகுதியில் இறக்கிவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், குல்தீப் மற்றும் சந்தீப் ஆகிய இருவரையும் திமார்பூர் பகுதியில் கைது செய்தனர். பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


















