கோவை,
கோவை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சரும், எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி 41650 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார்.
இதையடுத்துதனக்கு வாக்களித்த தொண்டாமுத்தூர் தொகுதி இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆதிதிராவிடர் காலனி, செம்மேடு கோட்டைக்காடு ஏழுவாய்க்கால், முட்டத்து வயல், முள்ளாகாடு, மடக்காடு, பச்சான் வயல் உள்ளிட்ட பகுதி மக்களை நேற்று நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்தார். மேலும் கழகத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு மூத்த முன்னோடிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைத்ததற்கு நன்றி. கழக ஆட்சியின்போது தொண்டாமுத்தூர் தொகுதியிலும் மட்டுமின்றி கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றினோம். கோவை மாவட்டத்தில் 50 ஆண்டு காலம் காணாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் தந்தோம். இதற்காக
கோவை மாவட்ட மக்கள் நன்றி தெரிவிக்கும் வகையில் 10 தொகுதிகளில் வெற்றி பெற வைத்துள்ளார்கள். ஆகவே உங்களை என்றும் மறக்க மாட்டேன்.
புதிதாக ஆட்சி அமைத்துள்ள தி.மு.க. கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தடுக்கிறது. கோவை மாவட்டத்தையும் தொடர்ந்து புறக்கணிக்கிறது. இதுபோல பல்வேறு திட்டங்களை நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு தடுக்கிறது. இது தொடர்ந்தாலோ திட்டங்களை நிறைவேற்றாவிட்டாலோ மக்கள் நலனுக்காக சாலையில் இறங்கி போராடவும் தயங்க மாட்டேன்.
கழக ஆட்சியின்போது காவல்துறையினருக்கு நாங்கள் உரிய மரியாதை தந்தோம். நீங்கள் மக்களை மதிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை தாருங்கள்.
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறோம் என்பதை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் மறந்துவிடக்கூடாது. நடுநிலையோடு நடந்து கொள்ளுங்கள்.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.
பொதுமக்களுக்கு தேவையான திட்டங்களை கண்டிப்பாக போராடி பெற்று தருவோம். அதேபோல இத்தொகுதிக்கு கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தி.மு.க. புறக்கணிக்காமல் உடனே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசினார்.


















