பழநி ரயில் நிலையத்தில் பயணிகள் தங்களது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துச் செல்லும் வகையில், டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் வசதி செப்டம்பர் 1 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் ரூ.14 கோடியில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் லாக்கரில் உள்ள க்யூஆர் குறியீட்டை செல்போனில் ஸ்கேன் செய்து, தேவையான அளவிலான லாக்கரைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் ஜிபே அல்லது ஃபோன்பே மூலம் கட்டணம் செலுத்தினால், லாக்கர் எண் மற்றும் ரகசிய ஓடிபி கிடைக்கும்.
உடைமைகளை அதிகபட்சமாக இரண்டு நாட்கள் வரை லாக்கரில் வைத்திருக்கலாம். லாக்கரின் அளவு மற்றும் பயன்படுத்தும் நேரத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். இந்த வசதி 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்புடன் செயல்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


















