சிவகங்கை
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் சூளுரைத்துள்ளார்.
சிவகங்கை சட்டமன்ற தொகுதிக் கழகம் சார்பாக, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிவகங்கையில் உள்ள மதகுபட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிவகங்கை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் விசிபி.கருணாகரன் தலைமை தாங்கினார்.
இப்பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பு செயலாளருமான டாக்டர் வைகைச்செல்வன் பேசியதாவது:-
வாக்களித்த மக்களுக்கும், வாய்ப்புதந்த மக்களுக்கும் நல்ல திட்டங்களை கொண்டு வந்து அவர்களை வாழ வைக்க வேண்டும் என்று நினைக்காமல், நாள்தோறும் கழக அரசை பற்றிக்குறை கூறுவது, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், 200 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் தி.மு.க.வினரை தோற்கடித்து அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்பதையே உயிர்மூச்சாக கொண்டு, கழக தொண்டர்கள் அனைவரும் கண் துஞ்சாது களப்பணியாற்றி வருகிறார்கள்.
கடந்த 10 ஆண்டு காலம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழி வந்த பொற்கால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமல்லாது, கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி மக்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்ந்தது கழக அரசு.
தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை நினைத்து வாக்களித்த மக்களுக்கு தி.மு.க அரசு ஏமாற்றத்தையே பரிசாக அளித்து வருகிறது. சட்டமன்ற தேர்தலில் கழகத்திற்கும், தி.மு.க.விற்கும் 3 சதவீதம் மட்டும் தான்
வாக்கு வித்தியாசம்.
தி.மு.க அரசின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்கள் இன்று அவதிப்படுகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது தி.மு.க.வினர், நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனேயே நீட்டுக்கு விலக்கு, ஏழு பேர் விடுதலையை ஏழே நாட்களில் செய்வோம் என்றும், அடகு வைத்த நகைகளை எல்லாம் திருப்பி தருவவோம் என்று ஆசை வலைகளை விரித்தும், சிலிண்டருக்கு மானியம் என்று சீட்டிங் செய்வது, மாதம் ஒரு முறை மின் கட்டண கணக்கெடுப்பு,
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்ததி, கூலியையும் உயர்த்திக் கொடுப்போம் இப்படி இன்னும் எண்ணற்ற வாக்குறுதிகளை ஏழை, எளிய மக்களிடம் அள்ளி விட்ட தேர்தல் வாக்குறுதிகள் என்னும் பித்தலாட்டங்கள் குறித்து தமிழக மக்கள் கேள்வி எழுப்புவார்களே என்கிற சங்கடம் தி.மு.க.விடம் கடுகளவும் கிடையாது.
அம்மா அவர்களின் அரசு, பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தியது. ஆனால், தி.மு.க ஆட்சி அமைந்ததும், கழக அரசின் திட்டங்களை தி.மு.க அரசு தடுத்து நிறுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஏழைப்பெண்களுக்கு தாலிக்குத்தங்கம் வழங்கும் திட்டத்தையும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இப்படி கழக அரசின் பல்வேறு திட்டங்களை தி.மு.க அரசு முடக்கி வருகிறது.
கழகத்தின் கடைசி தொண்டனாலும், கட்சிக்கு தலைவனாக முடியும் என்பதற்கு அ.தி.மு.க.வே சாட்சி என்றால், மறைந்த கருணாநிதி குடும்பத்தை தவிர, வேறு யாராலும் தி.மு.க தலைவர் பதவியை கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாது என்பதற்கு சாட்சியாக தி.மு.க விளங்குகிறது. காவல்துறையினருடன் மோதல்,
அரசு அதிகாரிகளுடன் அடாவடிகளில் ஈடுபடுவது என தி.மு.க அமைச்சர்களின் அடாவடித்தனமான பேச்சுக்கள் அனைத்தும் அச்சத்தையே ஏற்படுத்துகிறது. எதிரியாக இருந்தாலும் அரசியல் என்று வந்து விட்டால் மரியாதையாகவே பேச வேண்டும்.
மரியாதையாகவே நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்ன பேரறிஞர் அண்ணாவின் சொல்லை மீறி அவமரியாதை மற்றும் அவதூறு அரசியலை நடத்தி வருகிறது தி.மு.க அரசு. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த இயக்கத்தையும், கழகத்தையும் அழிக்க கூட்டுச்சதி செய்து நாள்தோறும் பொய்ப்பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க.விற்கு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவோம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பு செயலாளருமான டாக்டர் வைகைச்செல்வன் பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வி.சி.பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ, மின்னல் மீனாட்சிசுந்தரம், ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூராட்சி கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


















