சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
மதுரை
தமிழகத்தின் தலைநகர் கொலை நகரமாக மாறிவிட்டது என்றும் ஸ்டாலின் கையில் வைத்திருக்கும் காவல்துறை தோல்வியடைந்து விட்டது என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார்.
மகாகவி பாரதியார் நினைவு நாள் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற சாதனை படைத்தவருக்கு வித்யா சேவா ரத்னா விருது நிகழ்ச்சி பாரதியின் யுவகேந்திரா சார்பில் சின்ன சொக்கிகுளத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் ஆசிரியர்களுக்கு விருதை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், நெல்லை பாலு, மங்கையர்க்கரசி மில் சேர்மன் பாகனேரி கண்ணப்பன் செட்டியார், ஆடிட்டர் சேது மாதவா உட்பட பலர் பங்கேற்றனர்.
அதனை தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
தி.மு.க ஆட்சியில் தினம், தினம் விழா நடத்துவதும் , விழா நாயகனாக முதல்வர் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக உள்ளது. அதற்காக மட்டுமே அரசு ஒட்டுமொத்தமாக கவனம் செலுத்துகிறது. மக்களுக்கு சேவை செய்வதில் குறைபாடு உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டில் நாட்டு மக்களுக்காக என்ன திட்டங்கள் கொண்டு வந்தார் என்று கேட்டால் பூஜ்ஜியம் மட்டுமே பதில் கிடைக்கும்.
நாங்கள் கொண்டு வந்த பல திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து அவர் கொண்டு வந்த திட்டமாக நடைமுறைப்படுத்தி வருகிறார். மக்களின் குறை, நிறைகளை கனிவோடு கேட்கக் கூடியவர் தான் தலைசிறந்த தலைவராக இருக்க முடியும். யார் பேச்சையும் கேட்க மாட்டேன். நான் சொல்வது தான் சட்டம் என இருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அவர் பேசுவது நகைச்சுவையாக உள்ளது. தமிழகத்தில் சிறந்த முதலமைச்சர் என்று கூறுகிறார். ஆனால் இன்றைக்கு தலைநகர் கொலை நகராக மாறி இருக்கிறது. தமிழகத்தில் கடந்த மாதம் 31 நாட்களில் 131 கொலைகள் நடந்து இருக்கிறது. செப்டம்பர் மாதம் ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 23 கொலைகள் நடந்து இருக்கிறது என்று குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இதைத்தான் எடப்பாடியார் 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக குற்றம் சாட்டினார். ஆனால் இதற்கு காவல்துறை சார்பில் பதில் அறிக்கை கூறப்பட்டுள்ளது. அதில் கொலைகள் நடப்பதை மறைக்கவில்லை.
ஆனால் எண்ணிக்கை வேறுபாடு என்று பதில் கூறியுள்ளனர். போலீஸ் மீது துளி அளவும் அச்சம் இல்லாமல் ரவுடிகள், குண்டர்கள் உலா வருகின்றனர். ஆனால் பிரச்சினைக்குரிய வீரியங்களை சரி செய்யாமல் காவல்துறை தோல்வி அடைந்து விட்டது.
அம்மா ஆட்சி காலத்திலும் சரி, எடப்பாடியார் ஆட்சி காலத்திலும் சரி, இங்கிலாந்து ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகராக தமிழக காவல்துறை விளங்கியது. ஆனால் இன்று தலைகீழாக மாறி விட்டது. குறிப்பாக தமிழகத்தில் கஞ்சா புழக்கம் தலைவிரித்து ஆடுகிறது. பள்ளி மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆன்லைன் ரம்மி மூலம் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது, தமிழகத்தில் பட்டப்பகலில் பெண்கள் சாலையில் நடமாட முடியவில்லை. குற்றங்களை தடுப்பதில் காவல்துறை தோல்வி அடைந்து விட்டதா என்ற கவலை மக்களிடம் எழுந்து இருக்கிறது.
இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கூறினார்.


















