சேலம்,
முக்கிய பிரச்சினைகள் குறித்து தெரிவிக்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அனைத்தும் விளம்பரம், தினமும் போட்டோ ஷூட் வர வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் சொல்லியிருக்கிறார் என்று கூறி உள்ளார்.
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி : தற்போது உயர்த்தப்பட்ட மின் கட்டணம் கேள்வி குஜராத்தை விட பல மடங்கு குறைவு என்று மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளாரே
பதில் : இவர் சொல்லித்தான் தெரியுமா. ஊடகத்திற்கும், பத்திரிக்கைக்கும் தெரியாதா,. இன்றைய சூழ்நிலை என்ன. இன்றைக்கு மக்கள் வாழ்வதற்கே போராடிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகள் கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள்.
அப்படி பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலே, மக்களின் எண்ணங்களை புரிந்து கொள்ளாமல் அவர்கள் மீது பெரிய மின் கட்டண சுமையை சுமத்தியுள்ளார்கள். சொத்துவரி உயர்வு. ஒரே நேரத்தில் இவ்வளவையும் எப்படி தாங்கிக்கொள்ள முடியும். பொருளாதார ரீதியாக அவர்கள் தன்னிறைவு பெறும் போது ஓரளவு உயர்த்தினால் பரவாயில்லை. சராசரியாக 34 சதவீதம் உயர்த்தியுள்ளார்கள்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வருடத்திற்கு 6 சதவீதத்தை உயர்த்தி கொள்ளலாம் என்று அனுமதி
அளித்துள்ளது. மூன்று வருடத்திற்கு 18 சதவீதம் உயர்ந்து விடும். இரண்டையும் சேர்ந்தால் 52 சதவீதம் உயர்ந்து விடும். 2026ல் இன்னும் கூடுதலாக அதிகரித்து கட்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சொத்துவரியை 100 சதவீதம் உயர்த்தியுள்ளார்கள். கடைகளுக்கு 150 சதவீதம் உயர்த்தியுள்ளார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக வியாபாரிகளுக்கு வருவாய் இல்லாத ஒரு சூழ்நிலை. இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது. இதனை கண்டித்து தான் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.
கேள்வி : தொகுதி பிரச்சனை குறித்து முதல்வருக்கு அளித்துள்ளதாக குறிப்பிட்டீர்களே. என்ன என்ன பிரச்சனை
பதில் :அதனை எப்படி சொல்ல முடியும். சொல்லிவிட்டால் ரகசியம் போய்விடும். கழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் முக்கிய பிரச்சினை தொடர்பாக கடிதத்தை அளிக்க சொல்லி விட்டேன்.
ஏற்கனவே இருக்கும் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. இவர் எங்கே செய்யப்போகிறார். சும்மா அனைத்தும் விளம்பரம். தினமும் போட்டோ ஷூட் வர வேண்டும். தினமும் டிவியில் வர வேண்டும், பத்திரிகையில் செய்தி வரவேண்டும் என்பதற்காக தான் அதை செய்துள்ளார்.
என்ன செய்துள்ளார் சேலம் மாவட்டத்தில். 15 மாத காலமாகிறது திமுக ஆட்சிக்கு வந்து. இந்த சேலம் மாவட்டத்திற்கு என்று பெரிய திட்டத்தை அறிவித்து அடிக்கல் நாட்டியுள்ளார்கள். ஏற்கனவே கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை தான் இன்றைக்கு ரிப்பன் கட் செய்து திறந்து கொண்டுள்ளார்.
அதனைக்கூட உருப்படியாக செய்யவில்லை. நாங்கள் கொண்டு வந்துள்ள திட்டத்தையாவது, நடைபெற்று வரும் பணிகளையாவது விரைந்து வேகமாக முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று ஊடகத்தின் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு கழ இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான
எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.


















