கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு
சேலம்
100 ஏரிகளை நிரப்பும் திட்டம் முறையாக நடைபெறவில்லை. விடியா அரசு அக்கறை காட்டாததால் இந்த திட்டம் ஆமை வேகத்தில் நடக்கிறது என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமான மழை பெய்த காரணத்தினால் வெள்ளம் வந்து கிட்டதட்ட 40 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சரபங்கா நதியில் வந்த வெள்ளம்,அந்த சரபங்கா நதிக்கரை ஓரமாக வசித்து வந்த 40 வீடுகளில் வெள்ளம் புகுந்து பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கழகத்தின் சார்பாக நகர கழக செயலாளர் மூலமாக அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களை நேரில் வந்து நிவாரண
உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-
கேள்வி : மின் கட்டணம் அதிகமாக ஏற்றப்பட்டுள்ளதே. இதனைக்கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதே
பதில் : ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளோம். கடுமையான மின் கட்டண உயர்வு. கடந்த இரண்டு ஆண்டு காலமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு ஆண்டு காலத்தில் போதிய வருவாய் கிடையாது. வேலை வாய்ப்பும் இல்லை. மக்கள் பொருளாதாரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கொரோனா நோய் தொற்றிலிருந்து படிப்படியாக மீளுகின்ற நிலையில், இதனை எல்லாம் விடியா திமுக அரசு பொருட்படுத்தாமல் மக்கள் படுகின்ற துன்பங்கள், வேதனைகளை எடுத்துக்கொள்ளாமல் இன்றைக்கு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார்கள்.
12 சதவீதத்திலிருந்து 52 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கண்டனத்திற்குரியது. இதனைக்கண்டித்து கழகத்தின் சார்பாக வரும் 16ம்தேதி கழகம் அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வி : மேட்டூர் உபரி நீர் திட்டத்தின் வாயிலாக சரபங்கா வடிகால் பகுதியில் உள்ள ஏரிகளை நிரப்பும் திட்டத்தைக் கொண்டு வந்தீர்கள். அந்த திட்டம் சரிவர செயல்படாத காரணத்தினால் தான் இதுபோன்று குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்து விடுவதாக தகவல் உள்ளதே.
பதில்: அந்த திட்டம் வேறு, இந்த திட்டம் வேறு. அந்த திட்டத்தைப் பொறுத்தவரையில் கிட்டதட்ட வறண்ட 100 ஏரிகளுக்கு நீர் நிரப்புவதற்காக போடப்பட்ட மிகப்பெரிய திட்டம். சுமார் ரூபாய் 562 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு, நானே நேரில் வந்து முதல் பகுதியை துவக்கி வைத்தேன். அதற்குப்பிறகு ஸ்டாலின் அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுத்து எஞ்சிய பகுதியை முடித்திருக்க வேண்டும். இந்த பணிகள் முடிக்கப்படாத காரணத்தினால் இன்னும் பல ஏரிகள் வறண்டு தான் காணப்படுகிறது.
கன மழையின் காரணமாக மேட்டூர் அணை நிரம்பி, உபரி நீர் கடலில் வீணாக கலக்கிறது. இந்த 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை இந்த அரசு முறையாக நிறைவேற்றியிருந்தால் வீணாகக்கடலில் கலக்கின்ற நீரை இந்த 100 ஏரியை நிரப்பியிருக்கலாம். விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள்.
பொது மக்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். நிலத்தடி நீர் உயர்த்திருக்கும். வேளாண்மை சிறந்திருக்கும். இந்த அரசு இதில் அக்கறை காட்டாத காரணத்தினால், இந்த திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இது கண்டனத்திற்குரியது.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.


















