கோவை,
முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யிடம் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோதவாடி குளத்திற்கு வருகை தந்த முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்காமல் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ. மீது தாக்குதல் நடத்திய தி.மு.க.வினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவரிடம் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் மனு அளித்தனர்.
இதன் பின்னர் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் கோதவாடியில் 250 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இதற்கு நீராதாரமாக பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் தண்ணீர் நிரப்பப்படும். கடந்த 43 ஆண்டு காலமாக இக்குளத்தில் தண்ணீர் முழுமையாக நிரப்பப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த கழக ஆட்சியில் பொள்ளாச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தீவிர முயற்சி எடுத்ததை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி குளத்தை தூர் வார நிதி ஒதுக்கினார். இதனால்
தூர்வாரப்பட்டதால் குளம் முழுமையாக நிரம்பியுள்ளது.
இந்த குளத்தில் தண்ணீர் முழுமையாக நிரம்பியதையடுத்து கோதவாடி கிராம மக்கள் கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாக குளத்தின் கரையோரமாக உள்ள ஏரி காளியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து கொண்டாடியுள்ளனர். தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பொள்ளாச்சி வி.ஜெயராமனை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.
விழாவிற்கு வந்த முன்னாள் சட்டப்பேரவை துணை தலைவரும், கழக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ. விழாவில் பங்கேற்பதற்காக கோயிலுக்கு வருகை தந்துள்ளார். அப்போது தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் தலைமையில் தி.மு.க.வை சேர்ந்த செட்டியக்காபாளையம் துரை, அல்டாப், யாசின் மற்றும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி ஜெயராமனை
முற்றுகையிட்டு கோயிலுக்கு வரக்கூடாது என்று கற்களையும், செருப்புகளையும் வீசி வாய் கூசுகின்ற அளவிற்கு அநாகரிகமாக நடந்துள்ளனர். மேலும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பிரதிநிதியாக சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு சட்டமன்ற உறுப்பினரை தன்னுடைய சொந்த தொகுதிக்குள் செயல்படக்கூடாது என்பது இயற்கை நியதிக்கு எதிரானது. ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு உள்ள தார்மீக உரிமையை பறிக்க நினைப்பது சட்டவிரோத செயலாகும்.
இது ஜனநாயகத்திற்கு விடும் சவாலாகும். ஆளுங்கட்சியான தி.மு.க.வை சேர்ந்தவர்கள் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை செயல்பட விடாமல் தடுத்து உள்ளூர் ரவுடிகளை வைத்து மிரட்டியது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும். தி.மு.க.வினர் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவரான சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மற்றும் அவருடன் வந்தவர்கள் மீது கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது.
எனவே சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கின்ற வகையில் சட்டமன்ற உறுப்பினரை பணி செய்ய விடாமல் தடுத்து கற்களையும் மற்றும் செறுப்புளையும் வீசிய தி.மு.க.வை சார்ந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவருடன் வந்தவர்கள் மீது பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனவும் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் கழக தொண்டர்கள் மீதும் தி.மு.க.வினரின் தூண்டுதலின்பேரில் தொடர்ந்து பொய் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இப்போக்கை கண்டித்து மேற்கு மண்டல காவல்துறை தலைவரிடம் மனு அளித்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட கழக செயலாளர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ., கழக அமைப்பு செயலாளர்கள் செ.தாமோதரன் எம்.எல்.ஏ, ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கே.அமுல் கந்தசாமி, வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் கே.தாமோதரன் மற்றும் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


















