மதுரை
ஸ்டாலினை தென் மாவட்ட மக்கள் புறக்கணித்து வருகின்றனர். தி.மு.க. ஆட்சி விரைவில் விரட்டியடிக்கப்படும். எடப்பாடியார் ஆட்சி மீண்டும் அமையும் என்று கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் உறுதியாக கூறினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜையை முன்னிட்டு கழகத்தின் சார்பில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு தங்க கவசத்தை புரட்சித்தலைவி அம்மா வழங்கினார். அதேபோல் உசிலம்பட்டி பெருங்காமநல்லூரில் கைரேகை சட்டத்தை எதிர்த்து உயிர்நீத்த தியாகிகளுக்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவில் மணிகண்டத்தை எடப்பாடியார் அமைத்து கொடுத்தார். அதேபோல் உசிலம்பட்டியில் மூக்கையா தேவருக்கு சிலை வைக்க ஆணை வெளியிட்டார்.
பொதுவாக இந்த கடைக்கோடியில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்திற்கு, மருத்துவக்கல்லூரி வேண்டும் என்று இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்தது. அந்த கோரிக்கை யை நிறைவேற்றும் வகையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவதரித்த இந்த பூமிக்கு மருத்துவக்கல்லூரியை எடப்பாடியார் உருவாக்கி கொடுத்தார். அதேபோல் விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கும் மருத்துவக்கல்லூரிகளை உருவாக்கி கொடுத்தார்.
புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் எடப்பாடியார் கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில், தென் மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். குறிப்பாக தென் மாவட்டத்தில் தொழில் தொடங்கும் தொழில் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு மானியங்களை எடப்பாடியார் வழங்கினார்.
தென் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை எடப்பாடியார் உருவாக்கி கொடுத்தார். தென் மாவட்டங்களில் அதிக அளவில் குடிமராமத்து பணிகள் செயல்படுத்தப்பட்டன. குறிப்பாக முல்லை பெரியாறு என்பது தென் மாவட்ட மக்களின் ஜீவாதார உரிமை. கடந்த அம்மா ஆட்சி காலத்தில் சரி, எடப்பாடியார் ஆட்சிக்காலமும் சரி மூன்று முறை முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக தேக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு அமைந்து ஒன்றரை ஆண்டு காலத்தில், தென் மாவட்ட மக்களை புறக்கணித்து வருகிறது. எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை கூட இரண்டு முறை 142 அடியாக தேக்க வாய்ப்பு இருந்தும், அதை தேக்கவில்லை.
அதனால் தான் தென் மாவட்டங்களுக்கு ஸ்டாலின் வரும்போது மக்கள் அவரை புறக்கணிக்கின்றனர். இப்போது எடப்பாடியார் தென் மாவட்டத்திற்கு வருகை தந்த போது மக்கள் எல்லாம் ஒன்று திரண்டு தங்களின் நன்றியை தெரிவித்தனர்.
ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இந்த இயக்கத்திற்கு எடப்பாடியார் தலைமை ஏற்று, மிகச்சிறப்பாக கழகத்தை வழிநடத்தி, திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக உள்ளார். புரட்சித்தலைவி அம்மா எப்படி திமுகவை எதிர்கொண்டாரோ அதேபோல் திமுகவை கடுமையாக எதிர்த்து அவர்கள் செய்யும் தில்லுமுல்லுகளை நாட்டு மக்களுக்கு தோலுரித்து காட்டுகிறார் எடப்பாடியார். சில துரோகிகள் திமுகவுடன் கைகோர்த்துக்கொண்டு, இந்த இயக்கத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள். இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் தானாக அழிந்து போவார்கள். அதுதான் இந்த இயக்கத்தின் வரலாறு ஆகும்.
சட்டமன்றத்தில் ஒரு ஜனநாயக படுகொலையை விடியா திமுக அரசு செய்தது. ஆனால் பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் தி.மு.க.வுக்கு ஆதரவாகவே செயல்பட்டார். நடப்பதை எல்லாம் அம்மாவின் ஆத்மாவும், புரட்சித்தலைவி ஆத்மாவும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது.
இன்றைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவிக்க வந்த பொழுது ராமநாதபுரம் மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் கழகத்தினர் மிகப்பெரிய வரவேற்பை எங்களுக்கு அளித்தனர். இன்றைக்கு ராமநாதபுரம் மாவட்டம் எடப்பாடியார் கோட்டையாக உருவாகியுள்ளது.
இன்றைக்கு சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு இதுபோன்று உயர்வால் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இந்த ஆட்சி என்றைக்கு வீட்டுக்கு போகும் என்று இறைவனை மக்கள் வேண்டுகின்றனர். நிச்சயம் மக்களால் இந்த தி.மு.க. ஆட்சி விரட்டியடிக்கப்படும். மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அம்மாவின் புனித ஆட்சி அமையும்.
இவ்வாறு கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.


















