தேனி,
தொழிலாளர் தினத்தை கொண்டாட தி.மு.க.-கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தகுதியில்லை என்று தேனியில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில் ப.ரவீந்திரநாத் எம்.பி. பேசினார்.
தேனியில் மே தின விழா பொதுக்கூட்டம் அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் பொன்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் சுப்புரத்தினம், மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தலைமை கழக பேச்சாளர்கள் சந்தானம், கோவை தங்கவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் பேசியதாவது:-
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் மற்றும் நிதி திட்டம், உழைக்கின்ற வர்க்கம் வயிராற உண்ண வேண்டும் என்பதற்காக அம்மா உணவகம், குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி வழங்கிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.
ஆனால் தற்போதைய தி.மு.க. அரசு தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டனர். அம்மா உணவகத்தை படிப்படியாக நிறுத்தி வருகின்றனர். அரசு மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, கால்நடை மருத்துவக்கல்லூரி, சட்டக்கல்லூரி, கலை கல்லூரிகளை துவக்கி, தேனி மாவட்டத்தில் இல்லாத கல்வி நிறுவனங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கியது கழக அரசு.
தி.மு.க.வுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் தொழிலாளர்கள் தினத்தை கொண்டாட தகுதியே இல்லை. கேரளாவை கம்யூனிஸ்ட் ஆளுகிறது. தமிழகத்தில் கூட்டணியில் உள்ளனர். ஜான் பென்னிகுயிக் அவர்களால் தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக கட்டப்பட்ட முல்லை பெரியார் அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கவும் பேபி அணையை பலப்படுத்தி 152 அடி வரை நீரை தேக்கிட உச்சநீதிமன்றத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்று தந்தார்.
ஆனால் பேபி அணையை பலப்படுத்த தடையை ஏற்படுத்தி, முல்லை பெரியார் அணை பலமில்லை, உடைந்து விடும் என பொய் பிரச்சாரம் செய்து மக்களை குழப்பி ஆதாயம் பெற்று வரும் கம்யூனிஸ்டு அரசு மற்றும் அணை பிரச்சினையில் ஆதாயம் தேடும் தி.மு.க. அரசு தமிழக மக்களின் வாக்குகளை மட்டும் பெற்றுக்கொண்டு ஏமாற்றி வருகிறது.
இதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தேர்தலில் தி.மு.க. அளித்த வாக்குறுதியான மகளிருக்கு மாத உரிமை தொகை ரூ.1000 வழங்கவில்லை. எப்பொழுது வழங்கினாலும் ஆட்சி அமைந்ததிலிருந்து கணக்கிட்டு மொத்தமாக வழங்க வேண்டும்.
மதுரை-போடி ரயில் திட்டம் குறித்து பாரத பிரதமர், ரயில்வே அமைச்சரிடம் பேசியதன் காரணமாக ரூ.200 கோடிக்கு மேல் நிதியை ஒதுக்கி தேனி வரை பணிகள் முடிவடைந்து விரைவில் ரயில்சேவை துவங்க உள்ளது.
அதுபோல் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். இவ்வாறு தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் பேசினார். இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


















