சேலம்,
மக்கள் செல்வாக்கை இழந்தவரை பெரிதுபடுத்துவது சரியல்ல. விவாத மேடைகளில் தகுதியான நபர்களை அமர வையுங்கள் என்று ஊடகங்களுக்கு கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி : தலைமை அலுவலகத்தில் உள்ள பொருட்கள் எந்த வகையிலும் திருடு போவதற்கு வாய்ப்பே இல்லை என்று புகழேந்தி தெரிவித்துள்ளாரே.
பதில்: புகழேந்தி யார். கழக உறுப்பினர் அல்ல. ஏற்கனவே கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர். அவர் ஏற்கனவே அமமுக.வில் இருந்தவர். அங்கிருந்து தான் கட்சியில் வந்து சேர்ந்தார். கட்சிக்கு விரோத செயல்களில் ஈட்டுப்பட்ட காரணத்தினாலே கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர். இந்த கட்சிக்கு அவருக்கும் சம்பந்தம் கிடையாது.
இரண்டாவது இவர் பெரிய ஆளே கிடையாது. ஊடகமும், பத்திரிகையும் தான் பெரிய ஆளாக செய்து
கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கு ஒரு வார்டில் வாங்கும் ஓட்டுக்கூட அவர் வாங்கவில்லை.
ஓசூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டார். நோட்டா வாங்கிய ஓட்டைவிட இவர் வாங்கிய ஓட்டு குறைவு. சுமார் 2 ஆயிரம் வாக்குகள் தான் வாங்கினார் என்று நினைக்கிறேன்.
அப்படிப்பட்டவர் இந்த ஊடகத்தையும், பத்திரிக்கையும் பயன்படுத்தி பெரிய ஆள் போலவும், பெரிய அரசியல்வாதி போலவும், மக்கள் செல்வாக்கு உள்ளவர் போலவும் தோற்றத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார். மக்கள் செல்வாக்கை இழந்த ஒரு நபர். அவரைப்பற்றி பேசுவது சரியில்லை என்று நான் நினைக்கின்றேன்.
கேள்வி :தொடர்ந்து பேசி வருகிறாரே.
பதில் :நீங்கள் தான் வாய்ப்பு அளித்துக் கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து பேசி வருகிறார் என்றால் கேவலமாக இல்லையா.எ ங்கள் வார்டில் போட்டியிடுகின்ற உறுப்பினர் ஓட்டைவிட குறைவாக வாங்குகிறார். அப்படிப்பட்டவரை விவாத மேடையில் அமர வைத்து கேள்வி கேட்கிறீர்கள். இது ஊடகத்திற்கு கேவலம்.
தகுதியான நபர்களை அமர வையுங்கள். நிறைய பேர் உள்ளார்கள். நடுநிலையாளர்கள் இருக்கிறார்கள். தகுதியான நபர்களை நீங்கள் விவாத மேடையில் வைத்து விவாதம் செய்தால் பரவாயில்லை. உங்களுக்கு பரபரப்பு செய்தி வேண்டும். வீதியில் போவோரை அமர வைத்து கேட்டீர்கள் என்றால் இப்படிப்பட்ட செய்தி தான்
கிடைக்கும். நல்ல செய்தி எங்கிருந்து கிடைக்கும்.
ஒருவருடைய செல்வாக்கு தேர்தலை பொறுத்துத்தான் இருக்கிறது. அவர் எவ்வளவு வாக்குகள் வாங்கினார்
என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட மக்கள் சக்தி இழந்த ஒருவரை, மக்கள் செல்வாக்கை இழந்த ஒருவரை பத்திரிக்கையும், ஊடகமும் பெரிதுபடுத்திப் போடுவது சரியல்ல என்பது தான் என்னுடைய கருத்து.
அதுமட்டுமல்ல அம்மா இருக்கும்போது பெங்களூரில் கழக செயலாளர் பொறுப்பு அளித்தார். அங்கு அவர் ஒரு வழியாக கட்சியை ஒன்றுமே இல்லாமல் ஆக்கி விட்டார். பெங்களூரில் காந்தி நகரில் கழகம் வெற்றி பெற்றது. கோலாலம்பூரில் கழகம் வெற்றி பெற்ற வரலாறு படைத்த கழகம், இவர் பொறுப்புக்கு வந்த பிறகு அங்கு கழகம் அழிவதற்கு அடித்தளம் இட்டவர் தான் இந்த புகழேந்தி. இவருக்கும் தமிழகத்திற்கும் என்ன
சம்பந்தம்.
இவர் பெரிய அரசியல்வாதியா. ஏதோ பரபரப்பு செய்தி வேண்டும் என்பதற்காக நீங்கள் போடுகிறீர்கள் என்றால் நாங்கள் என்ன செய்வது.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.


















