தூத்துக்குடி
தமிழகத்திற்கு விடியலை தருகிறோம் என்று கூறி விட்டு மக்களுக்கு சொல்லொண்ணா துயரத்தை பரிசாக அளித்துள்ளது விடியா தி.மு.க. அரசு என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறி உள்ளார்.
சொத்து வரியை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து கோவில்பட்டியில் உள்ள தேவர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ தலைமை தாங்கி பேசினார்.
இதன்பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கழக ஆட்சியின் போது 5 சதவீத வரி உயர்வை உயர்த்திய போது அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், சொத்து வரியை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கிறது அ.தி.மு.க அரசு என்று தெரிவித்தார். இப்போது தமிழகத்தில் தி.மு.க.வின் விடியா ஆட்சி நடக்கிறது. விண்ணை முட்டும் அளவுக்கு சொத்து வரியை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் செயலில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளது.
கடந்த காலங்களில் மக்களின் மனங்களில் சந்தோசம் என்னும் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடும் வகையில் நல்லாட்சியை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தந்தார். அம்மாவின் மறைவுக்குப்பின் அதே வழியை பின்பற்றி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அம்மாவின் நல்லாட்சியை மக்களுக்கு தந்தார்கள்.
இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க.வினர் ஸ்டாலின் தான் வாராரு. விடியல் தரப்போறாரு என்று பாட்டு பாடினர். தமிழகத்திற்கு விடியலை தருகிறோம் என்று கூறி விட்டு மக்களுக்கு சொல்லொண்ணா துயரத்தை பரிசாக அளித்துள்ளது விடியா தி.மு.க. அரசு.
அம்மா ஆட்சியின் போது ஒரு மாணவி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படார் என்று கூறி தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், ஸடாலின் குடும்பத்தை சேர்ந்தவருமான கனிமொழி, அதிமுக அரசுக்கு எதிராக பெண்ணினத்தின் போராளி நான். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ள பெண்ணின் குடும்பம் உட்பட அனைத்து பெண்ணினத்தை காப்பாற்றாமல் விட மாட்டேன் என்று போராட்டம் நடத்தினார்.
இப்போது தமிழகம் முழுவதும் தி.மு.க ஆட்சியில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவிக்காமல் கனிமொழி அமைதியாகி விட்டாரே என்று தூத்துக்குடி மாவட்ட மக்களங கேள்வி எழுப்புகின்றனர்.
தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மக்களிடம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம். இதை செய்வோம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினர். ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் ஆகியும் எந்த ஒரு நல்ல திட்டங்களையும் இதுவரை மக்களுக்கு செய்யவில்லை.
ஆனால் சொத்து வரியை நூறு சதவீதத்திற்கும் மேல் உயர்த்தி மக்களை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கி உள்ளது. சொத்து வரியை உயர்த்தியதற்காகவும், கோவில்பட்டி நகரில் 135 சாலைகள் அமைக்கும் பணிகளை ரத்து செய்துள்ளதற்காகவும் தி.மு.க அரசை வன்மையாக கண்டிக்கிறேன். கோவில்பட்டி நகர வளர்ச்சிக்காக நான் எந்த போராட்டத்தையும் சந்திக்க தயாராக உள்ளேன்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.


















