கோவை
குறைகளை சுட்டிக் காட்டினால் ரெய்டு நடத்துவதா? என்று தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கழக அமைப்பு தேர்தலை முன்னிட்டு கோவை இதயதெய்வம் மாளிகையில் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும் , எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார் எ.எல்.ஏ., அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ., கழக அமைப்பு செயலாளர்கள் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., செ.தாமோதரன் எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பி.கந்தசாமி, டி.கே.அமுல் கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், மாவட்ட கழக அவைத்தலைவர் ஏ.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ். பி.வேலுமணி பேசியதாவது:-
கோவை மாவட்டத்தில் முதல்கட்ட கழக அமைப்பு தேர்தல் சிறப்பாக நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் தமிழகம் முழுவதும் மக்கள் விரோத தி.மு.க. அரசை கண்டித்து கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் தி.மு.க. அரசிற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது மக்கள் நலனுக்காக கேட்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தந்தார்.
மேலும் கழக ஆட்சியில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் அதிகமான பால பணிகள் தொடங்கப்பட்டன. குறிப்பாக கோவையில் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தி.மு.க. அரசு கடந்த 7 மாதமாக எந்த மக்கள் நல திட்டங்களையும் செய்யவில்லை தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை.
குறைகளை சுட்டி காட்டினால் உடனே ரெய்டு செய்வது மட்டுமே தி.மு.க. அரசின் செயலாக உள்ளது. கழக ஆட்சியில் தொடரப்பட்ட பணிகளை மட்டுமே தற்பொழுது தி.மு.க. செய்து வருகிறது. புதிதாக தமிழகத்திற்கு தி.மு.க. அரசு எந்த மக்கள் நல திட்டங்களையும் செய்யவில்லை. ஆகவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் கழகம் அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேசினார்.


















