மதுரை
அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கும் தி.மு.க. ஆட்சி அதிக நாள் நீடிக்காது. மக்களே தூக்கி எறியும் காலம் விரைவில் வரும். நிச்சயமாக அம்மா ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ திட்டவட்டமாக கூறி உள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், மதுரை கிழக்கு தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆண்டார் கொட்டாரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் கார்சேரி கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கி பேசியதாவது:-
எத்தனை பெரிய பொறுப்புகள் இருந்தாலும் இயக்கத்தின் அடித்தளம் கிளைக்கழகம் தான். இந்த ஒன்றியத்தில் 177 கிளை கழகங்கள் உள்ளன. அவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறவில்லை.
வெறும் 2 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது. ஆனால் மிகப்பெரியவெற்றி பெற்றது போல் மக்களை மதிக்காத ஆணவம் கொண்ட அரசாக தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது.
புரட்சித்தலைவி அம்மாவின் அரசு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்கள், குறிப்பாக பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தந்தது. அதில் தாலிக்கு தங்கம் திட்டம், பெண்களுக்கு மானியத்துடன் இரு சக்கர வாகனம் திட்டம். இதுபோன்ற திட்டங்களை தி.மு.க.
அரசு முடக்கி வைத்து பெண் குலத்தை அவமரியாதை செய்து உள்ளது. அதுமட்டுமல்லாது மக்கள் பயன் அளித்து வந்த 2000 அம்மா மினி கிளினிக்கை மூடிவிட்டது.
அதை மாற்றி வீடு தேடி வரும் மருத்துவமனை என்ற திட்டம் தொடங்கியது. ஆனால் எந்த வீட்டுக்கும் வந்ததில்லை. ஆனால் வந்தது போல் தவறான புள்ளி விவரத்தை தி.மு.க அளித்து வருகிறது.
மதுரை மாவட்டத்திற்கு அம்மா ஆட்சியில் செய்த சாதனை திட்டங்களை நாம் கூற முடியும். நாம் கொண்டு வந்த திட்டங்களை தான் மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். அதேபோல் அம்மா உணவகங்களை பாதிக்குமேல் மூடிவிட்டனர்.
அம்மா உணவகத்தில் தி.மு.க. கவுன்சிலர் ஆம்லெட், ஆப்பாயில் என்று விற்பனை செய்யும் அவல நிலையை உருவாக்கி உள்ளனர். மக்களுக்கு எந்த திட்டமும் செய்யவில்லை.
ஆனால் கருணாநிதி பெயரில் மதுரையில் நூலகம், பல்வேறு இடங்களில் கருணாநிதி சிலை என்று ஸ்டாலின் அவரது தந்தையார் பெயரில் திட்டங்களை செய்ததை தவிர எந்த சாதனையையும் செய்யவில்லை
தற்போது அறநிலையத்துறையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து வருவதாக அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார். அறநிலையத்துறையில் செய்து வரும் திட்டங்கள் திருக்கோயிலில் உண்டியல் மூலம் கிடைக்கப்பெற்ற சேமிப்பு பணத்தை வைத்து செலவு செய்கிறார்களளே ஒழிய அரசு கஜானாவில் இருத்து நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
நிதி குறித்து வெள்ளை அறிக்கை விட்ட நிதியமைச்சர் தற்போது பழைய ஓய்வூதியத் திட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து என்று திட்டமும் கொடுக்க முன்வரவில்லை. ஒரே வருடத்தில் இந்தியாவில் எந்த அரசும் இந்த அளவுக்கு மக்களிடம் கெட்ட பெயர் வாங்கியது இல்லை. அதை திமுக தற்போது பெற்றுள்ளது
தினந்தோறும் 5 கொலைகள், கொள்ளை ,பெண்களுக்கு எதிரான குற்றம் என சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது. ஒரு நற்பெயரும் திமுகவுக்கு கிடைக்கவில்லை.
ராஜசேகர் மரணத்திற்கு சரியான சவுக்கடி எடப்பாடியார் கொடுத்தார் அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. இதுதான் இந்த ஆட்சியின் அவலட்சணம் ஆகும் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாக மக்களே சொல்ல தொடங்கி விட்டனர்.
திமுக ஆட்சிக்கு வரும் முன்பு மத்திய அரசை ஒன்றிய அரசு என சொன்னார்களா? தற்போது ஆட்சிக்கு வந்த பின்பு மக்களின் உணர்வுகளை தட்டி பறித்து ஏமாற்றுவதற்காக ஒன்றிய அரசு மாநில சுயாட்சி எனச்சொல்லி தப்பித்துக்கொள்ள பேசி வருகின்றனர்.
திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை, மத்திய அரசிடம் நிதியை பெற முடியவில்லை, ஆளுநரோடு சண்டை என விழி பிதுங்கி கொண்டிருக்கின்றனர். அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கும் தி.மு.க. ஆட்சி அதிக நாள் நீடிக்காது. மக்களே தூக்கி எறியும் காலம் விரைவில் வரும். நிச்சயமாக அம்மா ஆட்சியை மீண்டும் அமைப்போம்.
இவ்வாறு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
















