சென்னை
ஸ்டாலினுக்கு கட்சிக்குள் மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை. தி.மு.க. ஒரு நெல்லிக்காய் மூட்டை. அது விரைவில் சிதறி விடும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார்.
சென்னையில் உள்ள தலைமைக்கழக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது;-
கேள்வி : நேற்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவிலே அதிமுக வலிமை இல்லாமல் நான்கு ஐந்து துண்டாக உடைந்துள்ளது என்றும் அவர்களுக்கு என்று கொள்கை கிடையாது. திமுகவை எதிர்ப்பது மட்டும் தான் கொள்கையாக வைத்துள்ளார்கள் என்று முதல்வர் பேசியுள்ளாரே?
பதில் : திமுகவை பொறுத்தவரையில் குடும்ப ஆதிக்கம் மிகுந்த இயக்கம். அந்த கட்சியை பொறுத்தவரையில் கட்டி வைக்கப்பட்ட நெல்லிக்காய் மூட்டை போலத்தான் உள்ளது. அந்த நெல்லிக்காய் மூட்டை சிதறும் என்பது விரைவில் நடக்கலாம். அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு பொறுப்பும் இல்லாமல் முரசொலி செல்வம் காலில் விழுந்து எல்லோரும் ஆசிர்வாதம் வாங்குகிறார்கள். அவருக்கு கட்சியில் என்ன பொறுப்பு உள்ளது.
இவர்கள் எப்படிப்பட்ட பகுத்தறிவு வாதிகள் பாருங்கள். தந்தை பெரியார் வழி வந்தவர்கள் நாங்கள். அண்ணா வழி வந்தவர்கள் நாங்கள் என்று கையை தூக்கிக்கொண்டு பேசினால் மட்டும் போதுமா.
சுப்புலட்சுமி ஜெகதீசன் இவர்களுடைய குடும்ப ஆதிக்கம், கட்சியில் மூத்த தலைவர் மதிக்கப்படுவதில்லை என்ற அடிப்படையில் கட்சியை விட்டு ஒதுங்கிக்கொண்டார். அந்த துணை பொதுச்செயலாளர் பொறுப்பை யாருக்காவது வழங்கியிருக்கலாம் அல்லவா. அதனை அவருடைய தங்கைக்கு அளித்துள்ளார்.
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று அண்ணா சொல்வார். கழகம் ஒரு குடும்பம் என்று சொல்வார். இதுபோன்று தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கழகம் ஒரு குடும்பம் என்று ரத்தத்தின் ரத்தமாக கழகத்தில் உள்ளவர்களை பாவித்து குடும்ப பாசம் மிக்க கட்சியாக மாற்றிக்காட்டினார்.
புரட்சித்தலைவி அம்மாவை எல்லோரும் அம்மா என்று அழைத்து ஒரு குடும்ப பாசமுள்ள இயக்கமாக தான் கட்சியை அம்மா மாற்றியுள்ளார். இன்றைக்கும் கழகம் ஒரு குடும்பம் என்றால் அது கழகம் மட்டும் தான்.
ஆனால் குடும்பமே கழகம் என்றால் அது திமுக தான். அண்ணா கூறியது போல தம்பி உடையான் படைக்கு அஞ்சான். ஆனால் ஸ்டாலினை பொறுத்தவரையில் தங்கை உடையான் படைக்கு அஞ்சான். இதுபோல குடும்பத்தின் ஆதிக்கம். முதலமைச்சர் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்று அவ்வப்போது சர்வாதிகாரி வார்த்தையை தெரிவிக்கிறாரே தவிர சர்வாதிகாரத்தை எங்கே கட்சியினரிடம் காண்பித்தார்.
உள்ளாட்சி பிரதிநிதிகளிலிருந்து டாப் டூ பாட்டம் என்று சொல்வார்கள். அதாவது கீழிலிருந்து மேலே வரை அவர்கள் அவர்கள் அளவில் அதிகார துஷ்பிரயோகங்கள். அத்துமீறல்கள் அநியாயங்கள், கட்ட பஞ்சாயத்துக்கள், காவல்துறையினரை அடிப்பது, அரசு ஊழியர்களை அடிப்பது, உளறிக்கொட்டுவது இதுபோன்ற வேடிக்கை எல்லாம் நடைபெற்று வருகிறது.
புரட்சித்தலைவர் காலத்தில் யாராவது இருந்தால் கட்சியில் நீடிக்க முடியுமா. கட்சியிலிருந்து உடனடியாக டிஸ்மிஸ் தான். அமைச்சராக இருந்தாலும் டிஸ்மிஸ். அதுபோல அம்மாவிடம் நீடிக்க முடியுமா. கட்சியில் நீடிக்க முடியுமா. டிஸ்மிஸ் தான். அமைச்சர்கள் நீடிக்க முடியுமா. டிஸ்மிஸ் தான்.
ஆனால் திமுக தலைவராக இருந்து கொண்டு முதலமைச்சராக இருக்கின்ற ஸ்டாலினுக்கு புரட்சித்தலைவர் போல, புரட்சித்தலைவி அம்மா போல ஒரு சதவீத அளவிற்காவது தைரியம் உங்களிடம் உள்ளதா.
அந்த தைரியம், துணிச்சல்,திராணி எதுவுமே உங்களிடம் இல்லை. ஆனால் வாய் கிழிய பேசுகிறார். முதலமைச்சரின் பேச்சு
என்பது ஒரு புலம்பலைத்தான் வெளிப்படுத்தியுள்ளது. புலம்பலைத்தான் வெளிப்படுத்தியுள்ளார். அதிகாரம் இருந்தாலும் துணிச்சல் கிடையாது.
தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உண்டான தைரியம் கிடையாது. புலம்பி கொட்டி விட்டார். சபையில் பேசும்போது அமைச்சர்களாவது ஒரு பயபக்தியோடு இருந்தார்களா. ஒரு அமைச்சரை பார்த்தால் சிரித்துக் கொண்டிருக்கிறார். பொன்முடி சிரித்துக்கொண்டிருக்கிறார். இன்னொரு அமைச்சர் அவர் சொல்லி நான் என்ன கேட்பது என்று ஏளனத்தோடு சிரிக்கிறார்.
டி.ஆர்,.பாலு செருப்பை கொண்டு வரச்சொல்லி மேடையிலே போடுகிறார். ஒரு முதலமைச்சருக்கு, ஒரு கட்சியினுடைய தலைவருக்கு எந்த அளவுக்கு பொதுக்குழுவிலே மரியாதை உள்ளது என்பதை இதற்குமேல் சொல்ல முடியாது.
சமூக ஊடகங்களில் கழுவி, கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டு நடப்பு குறித்து என்ன என்று அவருக்கு தெரியாது. தன் கட்சியில் நெல்லிக்காய் மூட்டைபோல பிரச்சனை உள்ளது என்று தெரியுமா. மூட்டை அவிழ்த்தால்
சிதறிப்போய் விடும்.
மாற்றார் மருளும் வண்ணம் ஒரு ஆர்ப்பாட்டம், கூட்டத்தை நடத்திய இயக்கம் கழகம் தான். 75 மாவட்டங்களில் நடைபெற்றது. 75 மாவட்டங்களில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. 75 மாவட்டத்தில் கட்சியின் 51வது ஆண்டு தொடக்க விழா இன்றைக்கு நடைபெறுகிறது. இன்றைக்கும் சேலத்தில் ஆயிரக்கணக்கனோர் கழகத்தில் இணைந்துள்ளார்கள்.
இவை அனைத்தும் ஸ்டாலின் கண்ணுக்கு தெரியவில்லையா. உலக நடப்பு அவருக்கு தெரியவில்லை. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று அவருக்குத் தெரியவில்லை. எதிர்க்கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கின்ற ஒரு பொம்மை முதலமைச்சரை நாடு பெற்றுள்ளது என்றால் வருத்தப்படக்கூடிய
வேதனைப்படக்கூடிய விஷயம்.
கட்சியை பொறுத்தவரையில் ஒரு பிளவும் இல்லை. ஒரு பிரிவும் இல்லை. ஒரு சரிவும் இல்லை. 51 ஆண்டுவிழாவில் ஒரு எழுச்சிமிக்க இயக்கமாக இன்றைக்கு இருந்து கொண்டுள்ளது. அது அவருக்கு தெரியும்.(ஸ்டாலினுக்கு).
கேள்வி : மைத்ரேயன் ஓ.பி.எஸ்ஸிடம் சென்றுள்ளாரே?
பதில் : கட்சியை பொறுத்தவரையில் சமுத்திரம். சமுத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து குடித்தால் சமுத்திரம் குறைந்து விடுமா. அப்படித்தான் இதுவும்.
கேள்வி : கட்சியினரால் நான் தூக்கமின்றி தவிக்கிறேன் என்று ஸ்டாலின் பேசியுள்ளாரே?
பதில் : துரைமுருகனிடம் முதல்வர் பதவியை அளித்து விட்டு, கட்சித் தலைவர் பதவியை அளித்து விட்டு இவர் நிம்மதியாக ரெஸ்ட் எடுக்கலாம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.


















