முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடும் தாக்கு
விருதுநகர்
விடியா ஆட்சியில் யாருமே சுபீட்சமாக இல்லை. வாக்களித்த மக்களும் மகிழ்ச்சியாக இல்லை, ஓட்டு கேட்ட தி.மு.க.வினரும் மகிழ்ச்சியாக இல்லை என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறி உள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற தொகுதி கழகம் சார்பாக அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த வாக்காளர்களுக்கும், கூட்டணி கட்சி மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பேரறிஞர் அண்ணாவின் பெயரை தனது இயக்கத்திற்கு வைத்து தமிழகமெங்கும் பட்டி, தொட்டியெல்லாம் அண்ணாவின் புகழைக்கொண்டு சென்றவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தி மதிய உணவுத்திட்டத்தை கொண்டு வந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செருப்பு, சீருடை கொடுத்து கல்வியில் புரட்சியை உருவாக்கியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.
புரட்சித்தலைவருக்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் படிக்கின்ற ஏழை மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக சைக்கிள் கொடுத்தார், லேப்டாப் கொடுத்தார், நோட்டு புத்தகம், சீருடை வழங்கினார். பஸ்பாஸ், கல்வி உதவித்தொகை வழங்கினார். உயர்கல்வியில் தமிழகத்தை முதன்மையாக மாநிலமாக மாற்றி காண்பித்தவர் புரட்சித்தலைவி அம்மா.
புரட்சித்தலைவி அவர்கள் மறைவிற்கு பிறகு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் மாணவர்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காகவும், மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தார்.
அது மட்டுமல்ல சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அரசு கலை கல்லூரிகளை கொண்டு வந்தார். விருதுநகரில் மருத்துவக்கல்லூரியை கொண்டு வந்தார். கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை தீட்டினார்.
இப்படி உழைக்கின்ற கட்சியாக அ.தி.மு.க. இருந்து இருக்கின்றது. ஆனால் தி.மு.க இன்று என்ன செய்கின்றது. இதை செய்வேன், அதை செய்வேன் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தனர். விடியும் என்று நினைத்த மக்களுக்கு விடியாத ஆட்சியாக மாறி விட்டது. நாட்டில் யாருமே சூபிட்சமாக இல்லை. ஓட்டு போட்ட மக்களும் மகிழ்ச்சியாக இல்லை.
ஓட்டு கேட்ட திமுகவினரும் மகிழ்ச்சியாக இல்லை. திமுகவில் முக்கிய தலைவர்கள் மட்டுமே பிழைக்கின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் சாலை ஓரத்தில் நான் கட்சிக்காரர்களுடன் டீ சாப்பிட்டபோது, குலாளர் சமூகத்தினர் வந்து என்னிடம் இந்த ஆட்சி மீது கோபத்தை வெளிப்படுத்தினர்.
அ.தி.மு.க ஆட்சியில் செங்கல் சூளைக்கு மண் எடுக்க இலவசமாக அனுமதி கொடுத்தீர்கள். ஆனால் இப்போது ஒரு லோடு மண்ணுக்கு 9 ஆயிரம் பணம் கொடுத்து வாங்கி தொழில் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று வேதனையுடன் கூறினர்.
தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டதற்காக மண்ணை திண்ண வேண்டிய சூழ்நிலைக்கு வந்துள்ளோம் என்று வேதனை தெரிவித்தனர்.
நாங்கள் மண் அள்ள இலவச அனுமதி கொடுத்தோம். இப்போது ஒன்பதாயிரம் ரூபாய் கொடுத்து மண் எடுப்பதால் அ.தி.மு.க ஆட்சியில் மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்த செங்கல் தற்போது 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் வீடு கட்டும் செலவு அதிகரித்து விட்டது. இந்த திமுக ஆட்சியில் ஒட்டு மொத்த பொருளும் போலியாகவே இருக்கிறது.
மின் கட்டணம் புதிய இணைப்பு பெற வேண்டும் என்றால் 5000 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. ஐந்தாயிரம் ரூபாய் மின்கட்டணம் செலுத்தினால் அடுத்த மாதம் 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியதிருக்கும். 50 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்திய நூற்பாலைகள் அடுத்த மாதம் 90 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். மின்கட்டணம் செலுத்தாவிட்டால் 250 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். இல்லை என்றால் பீஸ் கட்டையை உருவி சென்று விடுகின்றனர்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மண்ணெண்ணெய் வரவில்லை. மதுரையிலேயே கடத்தி கொண்டு சென்று விடுகின்றனர். அடுத்து திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் கிடைத்ததை சுருட்ட வேண்டும் என்ற மனநிலைக்கு திமுகவினர் வந்துவிட்டனர். இந்த ஒன்றரை ஆண்டில் விடியலை கொண்டு வருவோம் என்று கூறிய முதலமைச்சர், ஓட்டு போட்ட மக்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளார்.
எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது இப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அவரது வீட்டுக்கு முன்பு கருப்பு கொடி ஏந்தி மின்சார கட்டணத்தை நினைத்தால் எனது உடம்பிலே மின்சாரம் பாய்கின்றது என்று கூறினார்.
இப்போது மின்சார கட்டணத்தை பொறுத்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றார். அண்ணா திமுக ஆட்சியில் சொத்து வரியை உயர்த்தவில்லை, வீட்டு வரியை உயர்த்தவில்லை, கழிவுநீர் இணைப்பு வரியை உயர்த்தவில்லை, மின் கட்டணத்தை உயர்த்தவில்லை.
எந்த வரியையும் உயர்த்தவில்லை. எல்லா வரிகளையும் உயர்த்தி விட்டு ஸ்டாலின் விளக்கம் வேறு கூறுகின்றார். மக்கள் பொறுத்துக்கொள்ளுங்கள் என்றும், கசப்பாகத்தான் இருக்கிறது ஆனால் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்கின்றார். நீங்கள் மட்டும் லட்டு சாப்பிடலாம் நாங்கள் விஷத்தை சாப்பிட வேண்டுமா.
இன்றைய தி.மு.க ஆட்சியில் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறது. தி.மு.க.வினரின் குடும்பத்திற்கு தான் விடியல் வந்துள்ளது. ஓட்டு போட்ட எட்டு கோடி மக்களும் தெருவில் நிற்கின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் அண்ணா திமுக ஆட்சியில் எந்த குறையும் கிடையாது. அண்ணா திமுக ஆட்சி காலத்தில் எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது எனது முயற்சியால் விருதுநகரில் மருத்துவக்கல்லூரியை கொண்டு வந்துள்ளோம்.
நாங்கள் கொண்டுவந்த மருத்துவக்கல்லூரியை ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். கழக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடத்தை எல்லாம் மீண்டும் வெள்ளை அடித்து சுண்ணாம்பு அடிச்சு கலர் கொடுத்து திறந்து வைக்கின்றனர்.
சென்னையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடித்த பாலத்தை வெள்ளையடித்து கலரை மாற்றி கடந்த வாரம் முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். ஏதோ அவர் ஆட்சியில் கட்டி திறந்து வைத்தது போல் டிவியில் ஒளிபரப்பு செய்கின்றனர். அண்ணா திமுக ஆட்சியில் செய்த திட்டங்கள் சாதனைகள் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம், டபிள்யூ புதுப்பட்டி, மம்சாபுரம் இந்த பகுதிகள் எல்லாம் அண்ணா திமுக ஆட்சியில் தான் அனைத்து சாலைகளும் புதிதாக போடப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து சாலைகளும் அதிமுக ஆட்சியில் தான் போடப்பட்டது.
தண்ணீர் பிரச்சினை இல்லாத ஒரு நகராட்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியை கொண்டு வந்தோம். மின்கட்டணம் உயர்ந்து விடும் என்பதற்காக மின்சாரத்தை கட் செய்கின்றனர். மின்கட்டணம் உயர்ந்தால் மக்கள் கொந்தளிப்பார்கள் என்பதால் மின்வெட்டை ஏற்படுத்துகின்றனர்.
மின்வெட்டுக்கு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புதிதாக ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அணில்கள் செல்வதால் மின்தடை ஏற்படுகிறது என்று புதுக்கதையாக சொல்கிறார். அதிமுக ஆட்சியிலும் அனில்கள் செல்லத்தான் செய்தது. கடந்த 10 ஆண்டுகளில் அண்ணா திமுக ஆட்சியில் மின்தடை என்பதே கிடையாது.
இப்போது முதலமைச்சர் ஸ்டாலில் கட்டுப்பாட்டில் அரசு நிர்வாகம் இல்லை. அதிகாரிகள் ஒன்று செய்கின்றனர், அமைச்சர்கள் ஒன்று செய்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று செய்கின்றனர். திமுக நிர்வாகிகள் ஒன்று செய்கின்றனர்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.


















