சென்னை
நீட்தேர்வு ரத்து வாக்குறுதியை நிறைவேற்றாதால் மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
17-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காசிமேடு கடற்கரையில் சுனாமியால் உயிர்நீத்தவர்களுக்கு வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதன்பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:–
சுனாமி தமிழ்நாட்டை தாக்கிய போது, 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குறிப்பாக கடலையே நம்பி வாழ்கின்ற மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்து, தங்களுடைய சொந்தங்களை இழந்து நிர்க்கதியாக நின்றபோது அவர்களுக்கு நாங்கள் இருக்கிறோம், நான் இருக்கிறேன் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உலகத்திற்கே எடுத்துக்காட்டாக மீட்பு நடவடிக்கைகள், மறுவாழ்வு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகளை செய்தார்.
கடற்கரை மாவட்டங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்ட நிலையில், உடனடியாக அமைச்சர்களை எல்லாம் அனுப்பி, அவர்களுக்கு வேண்டிய நிவாரண நடவடிக்ககைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்தார். அதன் அடிப்படையில் தான் சுனாமி மறுவாழ்வு என்ற திட்டத்தை ரூ.3.50 ஆயிரம் கோடிக்கு மேல் தீட்டி உலக வங்கியிடம் நிதி பெற்று சுனாமிக்கு முன், சுனாமிக்கு பின் என்று முழுமையான அளவிற்கு கிராமங்களை மீட்டெடுத்து அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை உருவாக்கினார்.
கேள்வி:- 17 வருடங்கள் கடந்து விட்டது. ஆனாலும் வீடு இல்லாமல் இன்னும் போராட்டம் நடத்தி வருகிறார்களே?
பதில்:- கொளத்தூர் தொகுதியில் தான் போராடி வருகிறார்கள். ஓட்டு போட்ட மக்களின் வீடுகளை இடித்ததால் இன்றைக்கு அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எங்கள் ஆட்சிக்காலத்தில் முழுமையாக மீனவர்களுக்கு அனைத்து கிராமங்களுக்கும் வீடுகளை அளித்தோம்.
உதாரணத்திற்கு இங்கே எடுத்துக் கொள்ளுங்கள். என்.டி.ஓ. குப்பத்தை சென்று பாருங்கள். நல்லதம்பி ஒடைகுப்பம் பகுதிகளில் பிரமாண்டமாக வீடு கட்டி தந்துள்ளோம். அதுபோல திருவொற்றியூரில் திருச்சனாங்குப்பத்தில் பிரமாண்டமாக வீடு கட்டி தந்துள்ளோம். இங்கே இருக்கின்ற சிங்கார நகர், எம்.ஜி.ஆர். நகர், ஜீவரத்தினம் காலனி, அவை அனைத்தும் திமுக ஆட்சியில் கட்டியதா? அம்மாவின் ஆட்சியில் கட்டியது.
திருவொற்றியூரில் சுனாமி குடியிருப்புகள் கட்டியுள்ளோம். அன்றைக்கு நான் அமைச்சர். டாடா நிலத்தை வாங்கி, எச்.எல்.எல். நிலத்தை வாங்கி வீடுகளை கட்டி கொடுத்தோம். எங்களை பொறுத்தவரை சுனாமியால் பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்கும் மறுவாழ்வு நடவடிக்கை, மீட்பு நடவடிக்கையை எடுத்து வீடுகளை கட்டி கொடுத்தோம்.
அதன்பிறகு தி.மு.க. ஆட்சி 2006-ல் பொறுப்பேற்ற பின் அக்கறை செலுத்தவில்லை. இப்போதும் கூட வெள்ளம், புயல் வந்தபோது கடற்கரை பகுதிகள் பாதிக்கப்பட்டது. குழு போட்டார்கள். கிட்டத்தட்ட மாத கணக்கில் ஆகிறது. சென்னை மீன்பிடி துறைமுகத்தில் 86 படகுகள் முழ்கியுள்ளது. வந்து பார்த்து விட்டு போனார்கள். குழு போடுவோம் என்றார்கள். குழு போட்டதோடு சரி. ஒரு ரூபாய் கூட நிவாரணம் தரவில்லை.
சென்னை மீன்பிடி துறைமுகம் மட்டுமல்ல. கடலூர், நாகப்பட்டினம். ஜெகதாபட்டினம், தேங்காய்பட்டினம், குளச்சல் இப்படி எத்தனையோ துறைமுகங்கள் உள்ளன. இதில் கணக்கெடுப்பு எடுத்து சென்றவர்கள் குழு போட்டார்கள். இந்த அரசை பொறுத்தவரை குழு அரசு. பொருளாதாரத்தை மேம்படுத்த குழு போட்டார்கள்.
என்ன அறிக்கை அளித்தார்கள் என்று தெரியவில்லை. அதுபோல குழுக்களை தான் போட்டார்களே தவிர அதனால் எந்த பலனும் கிடையாது. மீனவ மக்களுக்கு நிவாரணம் தரவில்லை. மீனவ மக்கள் அல்லாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிவாரணத்தையும் அளிக்காத அரசு இந்த அரசு. ஒரு கிலோ அரிசி கூட தராத ஒரே அரசு இந்த விடியா தி.மு.க. அரசு.
கேள்வி:- முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்களே?
பதில்:- அவர்கள் (தி.மு.க.) ஜ.நா.வில் கூட கேவியட் மனுவை தாக்கல் செய்வார்கள்.
கேள்வி:- இந்த ஆண்டு 403 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதுபோன்ற நிலையில் சட்டம்- ஒழுங்கு எப்படி உள்ளது என்று நினைக்கிறீர்கள்.
பதில்:- சட்டம்- ஒழுங்கை பொறுத்தவரையில் அம்மாவின் அரசு சூப்பர். சட்டத்தின் ஆட்சி நடந்தது. மக்கள் நிம்மதியாக, அமைதியாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தி தருவது ஒரு அரசின் கடமை என்பதை உணர்ந்து அதனைசெயல்படுத்தியது அம்மாவும். அம்மாவின் அரசும்.
முன்னர் மைனாரிட்டி அரசும் சரி, தற்போது நடைபெறும் விடியா அரசிலும் சரி, சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் அளவுக்கு, கொள்ளை, அடிதடி, கட்ட பஞ்சாயத்து, வெட்டு, குத்து, ரவுடியிசம் தான் தமிழகத்தில் தலை தூக்கியுள்ளது. காவல்துறையை பொறுத்தவரை ஸ்காட்லாந்துக்கு நிகரான காவல்துறையாக அம்மாவின் ஆட்சிக்காலத்தில் இருந்தது.
ஆனால் தற்போது தலை சரியில்லை. தலை சரியாக இருந்தால் தானே வால் சரியாக இருக்கும். எங்களை பொறுத்தவரை காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விட்டோம். காவல்துறை செயல்பாடுகளில் குறுக்கீடு கிடையாது. ஆளும் கட்சியும் சரி. ரவுடிகளும் சரி. இவர்களின் ஆட்சி தான் இன்றைக்கு நடந்து வருகிறது.
கேள்வி:- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மேடையில் ஒரு பொருளை காண்பித்து இதுதான் சீமானுக்காக மரியாதை என்று கூறியுள்ளார். அ.தி.மு.க. சீமானுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருந்ததே?
பதில்:- பொதுவாகவே இந்த ஆட்சியில் எல்லாம் ஒழுங்காக நடந்தால் எல்லோரும் ஒழுங்காக இருப்பார்கள். ஒழுங்காக இல்லை என்றால் செருப்பு தான் வந்து பாயும்.
கேள்வி:- குரூப் 2 தேர்வில் திருக்குறளை நீக்கி விட்டு விமர்சனம் வந்த பிறகு தான் அதனை சேர்த்த தி.மு.க. அரசின் செயல்பாடு குறித்து?
பதில்:- தி.மு.க. அரசை பொறுத்தவரை அரசியல் தமிழ் வியாபாரி. பொதுவாகவே இவர்கள் தமிழ் என்ற போர்வையை கையில் எடுத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுவதில் உலக மகா கெட்டிக்காரர்கள் யார் என்றால் மிகவும் சிறந்தவர்கள் என்ற விருதை தர வேண்டும் என்றால் அது தி.மு.க.வுக்கு தான் தர வேண்டும்.
1.50 லட்சம் தமிழர்களை அழித்தது யார்? அந்த ஆத்மாக்களின் வருத்தம் தி.மு.க.வை சும்மா விடாது. தமிழ் வளர்வதற்கு தமிழகத்தில் என்ன நடவடிக்கைஎடுத்தார்கள். நாங்கள் பட்டியலிட முடியும். உங்களால் பட்டியலை வெளியிட முடியுமா? செம்மொழி மாநாடு நடத்தினார்கள். அது அவர்களின் குடும்ப மாநாடு. நாங்கள் 8-வது உலக தமிழ் மாநாட்டை நடத்தினோம். அறிவியல் தமிழ் வளர்ந்தது. இது அம்மா எடுத்த முயற்சி.
அதேபோல அன்றைக்கு அம்மாவின் ஆசியோடு தகவல் தொழில்நுட்ப அமைச்சராக நான் இருந்தபோது உலக தமிழ் இணைய மாநாடு நடத்தினோம். இன்றைக்கு இணையத்தில் நீங்கள் பயன்படுத்தும் தமிழுக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது புரட்சித்தலைவி அம்மாவுக்கு தான். அதன் அடிப்படையில் நிறைய தமிழ் மென்பொருட்கள் உருவானது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். மதுரையில் தமிழ் மன்றம். இப்படி பல விஷயங்களை எங்களால் சொல்ல முடியும். தமிழ் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு உணர்வுப்பூர்வமாக, உளப்பூர்வமாக செயல்படுத்தியவர் அம்மா. ஆனால் இவர்கள் தமிழ் என்பார்கள். தமிழ் இனத்தை அழிப்பார்கள்.
கேள்வி:- தமிழக அரசு வெளியிட்டுள்ள பொங்கல் தொகுப்பில் ரொக்க பணம் என்ற வார்த்தை இடம் பெறவில்லையே?
பதில்:- மொட்டை தான். நாங்கள் ரூ.2.500 தந்தோம். நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும். அவர்கள் ரூ.2.500 தந்தார்கள். நாம் ரூ.5 ஆயிரம் என்று சொன்னால் ஏதோ பரவாயில்லை. தி.மு.க ஆட்சியில் ரூ.5 ஆயிரம் தந்தார்கள் என்று மக்கள் நினைப்பார்கள். ஆனால் இவர்கள் மெட்டை அடித்து விட்டார்கள். ஓட்டு போட்ட மக்கள் இப்போது அனுபவித்து வருகிறார்கள். இன்றைக்கு கூட தஞ்சையில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக கையெழுத்து போட்டு நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்றார்கள். ஆனால்
செய்யவில்லை. இதுபோன்று மாணவிகள் இறப்பதற்கு யார் காரணம். தி.மு.க. அரசு தான் முழு காரணம். ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் கிடையாது.
இவர்களின் ஒரே எண்ணம் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கழகத்தை அழித்து விடலாம், ஒழித்துவிடலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தான் சிறிய சிறிய விஷயங்களையும், பூத கண்ணாடி உதவியோடு பார்த்து செயல்படுகிறார்கள். சிறிய தவறு என்றாலும் ராணுவத்தை அழைப்பார்கள்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.


















