கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா சூளுரை
மதுரை
வருகிற 29-ந்தேதி மதுரை வருகைதரும் எடப்பாடியாருக்கு உற்சாக வரவேற்பு அளிப்போம் என்றும், பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்துவோம் என்றும், துரோகிகள், எதிரிகளுக்கு அதிர்ச்சியை கொடுப்போம் என்று கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ சூளுரைத்துள்ளார்.
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வருகின்ற 29ம்தேதி மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்ட கழகத்தின் சார்பில் மதுரையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது
கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
கழக இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற பின் முதன் முறையாக வருகின்ற 29ஆம் தேதி மதுரை வருகிறார் எடப்பாடியார். அவருக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். திமுக இப்போது மக்களிடம் நம்பிக்கையை இழந்து விட்டது. அம்மாவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் திமுக அரசு மீது மக்கள் கடும்கோபத்தில் இருக்கின்றனர்.
சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் நேரடியாக, கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
விழாக்களில் மட்டுமே முதலமைச்சர் கலந்து கொள்கிறார். அவரால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை, அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தில் தற்போது சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு போய் விட்டது. எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலாகட்டும், சட்டமன்ற பொது தேர்தலாகட்டும் பொதுமக்கள் நம்மை ஆதரிக்க தயாராகி விட்டனர்.
புரட்சித்தலைவர் மறைவிற்குப்பின் அம்மா அவர்கள் இந்த இயக்கத்தை காப்பாற்ற கடுமையாக போராடினார். அப்பொழுது துரோகிகளும், எதிரிகளும் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்ட போது, அதையெல்லாம் தகர்த்தெறிந்து மீண்டும் தமிழகத்தில் புரட்சித்தலைவர் புனித ஆட்சியை அம்மா அமைத்தார்.
அதுபோல் இன்றைக்கு அம்மாவின் மறைவிற்கு பின் நான்கரை ஆண்டுகாலம் சிறப்பான முறையில் ஆட்சியை எடப்பாடியார் செய்தார். தற்பொழுது சில தீய சக்திகளும், துரோகிகளும், விரோதிகளும் சேர்ந்து இந்த இயக்கத்தை அழிக்க முயற்சித்து வருகின்றனர். அதையெல்லாம் தகர்த்தெறிந்து இந்த இயக்கத்தை சீரோடும் சிறப்போடும் எடப்பாடியார் வழி நடத்தி வருகிறார்,
வருகிற 29ம் தேதி மதுரையில் எடப்பாடியார் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் நம் இயக்கத்தை அழிக்க துடிக்கும் துரோகிகளுக்கும், விரோதிகளுக்கும் பாடம் புகட்டும் வகையில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு மாநாடு போல் இந்த பொதுக்கூட்டத்தை நடத்திட வேண்டும்.
மதுரை தான் அரசியல் களத்தில் யார் ஆட்சி செய்வது என்பதை நிர்ணயிக்கும். எனவே மதுரையில் நாம் லட்சக்கணக்கில் திரண்டு மீண்டும் அதிமுக ஆட்சி வருவதை உறுதிப்படுத்த வேண்டும். தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் எழுச்சியோடு மாநாடு போல் இந்த பொதுக்கூட்டத்தை நடத்திட வேண்டும்.
இவ்வாறு கக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.


















