சென்னை
பேருந்தில் இருந்து நரிக்குறவர் குடும்பத்தினரை பாதி வழியில் இறக்கி விட்டு அவமதித்த செயலுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சில நாட்களுக்கு முன்பு நரிக்குறவர் சமுதாயத்தை சார்ந்த பெண்மணியை கோயில் அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தடுத்த நிகழ்வு, இரண்டு நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே வாணியக்குடி கிராமத்தை சேர்ந்த மீனவ பெண்மணி மீன் வியாபாரம் செய்துவிட்டு இரவில் மகளிருக்கான அரசு பேருந்தில் ஏறும்போது, அந்த பேருந்தின் நடத்துனர் மீன் நாற்றம் அடிப்பதாக தெரிவித்து அந்த பெண்மணியை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நிகழ்வு என்ற வரிசையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர் குடும்பத்தினரை பேருந்திலிருந்து பாதி வழியில் நடத்துனர் இறக்கிவிட்டதோடு, அவர்களது உடைமைகளை வீசி எறிந்ததாகவும் வீடியோ காட்சிகளுடன் செய்திகள் வந்துள்ளன.
இதுபோன்ற நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ்வது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற நிகழ்வுகள் இனி வருங்காலங்களில் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

















