விருதுநகர்
அதிகாரத்திற்கு வந்தவுடன் தலைகால் தெரியாமல் ஆடக்கூடாது என்றும் திமுகவின் ஆட்டம் விரைவில் முடிந்து விடும் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம் வடக்கு நகர செயலாளர் வக்கீல் துரைமுருகேசன் தலைமை வகித்தார். தெற்கு நகர செயலாளா் பரமசிவம், மாவட்ட கழக துணை செயலாளர் அழகுராணி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் வனராஜா, செல்வராஜா, விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
10 ஆண்டுகளாக ராஜேந்திரபாலாஜியை அமைச்சராக பார்த்த மக்கள், ஒரு மாற்றம் வேண்டும் என எண்ணி விட்டார்கள். 1967 இல் அண்ணா முதல்வராக பொறுப்பேற்ற பொழுது அவருக்கு புற்றுநோய் வந்தது. அமெரிக்காவில் வைத்தியம் செய்து சரி செய்து சென்னைக்கு வந்தார். சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் சிகிச்சை செய்ததற்கு யார் பணம் கொடுத்தார் என்று கேட்டபோது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என தெரிவித்தார்.
மிகச்சிரமத்திற்கு நடுவில் நடித்து சம்பாதித்த பணம். அப்படி அள்ளிக்கொடுத்த வள்ளல் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி கழகம். அண்ணாவுக்கு பிறகு உருவான கருணாநிதியால் கழகத்தை அழிக்க முடியாத நிலையில் அவருக்கு பின்னர் வந்த ஸ்டாலினால் எப்படி கழகத்தை அழிக்க முடியும். என்னை விரட்டி,விரட்டி பிடித்தனர். என்னை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். நான் பயப்பட்டு கழகத்தை விட்டு வெளியேறவில்லை.
இந்த இயக்கம் கடைக்கோடி தொண்டர்களால் உருவான இயக்கம். இதை யாராலும் அழிக்க முடியாது. உழைக்கின்ற தொழிலாளர்களுக்காக உருவாக்க பட்ட இயக்கம் கழகம். என் மீது பல வழக்குகள் டெல்லியில் நிலுவையில் உள்ளது. என்னை நாள் முழுவதும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஆட்டம் முடிய உள்ளது.
அதிகாரத்திற்கு வந்தவுடன் தலைகால் தெரியாமல் ஆடக்கூடாது. நான் 10 வருடங்கள் மந்திரியாக இருந்தபோது யாரையும் மரியாதை குறைவாக நடத்தியது இல்லை நான் இன்றைய கூட்டத்திற்கு வந்து கொண்டிருந்த போது ஒருவர் என்னை தடுத்து நிறுத்தி நகர்மன்ற தலைவர் பவித்ரா அவரின் கணவரை கொலை செய்து விட்டனர்.
பல கோடி கேட்டு அவரை இம்சை செய்து கொலை செய்து விட்டனர். இதுவரை சேர்மன் விஷயத்தில் நான் தலையிட்டது இல்லை. ஆனால் சேர்மன் விஷயத்தில் அரசியல் தலையிடு அதிகமாக இருந்துள்ளது. பவித்ராவின் கணவர் ஷியாம் இறப்புக்கு ராஜபாளையத்தில் உள்ள அரசியல் மையம் தான் காரணம் என என்னிடம் அவர் தெரிவித்தார்.
ஒன்றிய சேர்மன் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அப்போது எந்த தில்லும் முல்லும் கழகம் செய்யவில்லை. ராஜபாளையத்தில் இன்று அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. அதிகாரத்தில் தலையிடுவது அழிவுக்கு வழிவகுக்கும். தேவதானம் அருகே கண்மாய்கள் காணாமல் போய் வருகிறது ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை, கட்சி நிர்வாகிகளை கட்டுப்படுத்த வேண்டுகிறேன்.
டிராக்டர் லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு பல்வேறு திமுக கட்சி நிர்வாகிகள் வரி வசூல் செய்கின்றனர். கழக ஆட்சியில் இது போன்ற எந்த தொல்லையும் இருந்ததில்லை. திமுகவுக்கு இதே வேலை கலைஞர் ஆட்சியில் எட்டு மணி நேரம் மின்தடை என்றால் தற்போது ஸ்டாலின் ஆட்சியில் 10 மணி நேரம் மின்தடை.
இதுதான் இருவரின் ஆட்சிக்கு உள்ள வித்தியாசம். மின் கட்டணம் உயர்ந்ததால் அதை ஈடு செய்வதற்கு அடிக்கடி மின்தடை ஏற்படுத்துகின்றனர் காப்பர் கிடைக்காத காரணத்தால் 13,000 விலையுள்ள மின் மோட்டார் சரி செய்ய ரூபாய் 15,000 வரை செலவு ஆகிறது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
விவசாய மின் மோட்டார் 15 ஆயிரத்திலிருந்து 30,000 வரை விலை உயர்ந்துள்ளது. விவசாயி வயிற்றில் அடிக்கின்ற ஆட்சி திமுக ஆட்சி. டாஸ்மாக் கடையில் கவர்மெண்ட் சரக்கு கரூர் சரக்கு என இரண்டு கிடைக்கிறது. தற்போது கட்டிங் அடித்தால் போதை ஏறுவதில்லை. தொழிலாளர்கள் வாங்கிய ஊதியம் அனைத்தையும் டாஸ்மாக்கில் தொலைகின்றனர்.
அண்ணா திமுக ஆட்சியில் அரிசி பருப்பு டாஸ்மாக் என அனைத்து பொருட்களும் ஒரிஜினலாக இருக்கும். தற்போது இட்லி கடையில் இட்லிக்கும் சட்னிக்கும் சாம்பாருக்கும் தனித்தனி விலை வைத்துள்ளனர். அதுவும் எடை வைத்து கொடுக்கின்றனர்.
இந்த கொடுமை அனைத்தும் திமுக ஆட்சியில் தான் நடக்கிறது. அம்மா உணவகத்தில் ஐந்து ரூபாய் இருந்தால் வயிறார சாப்பிடலாம். தற்போது அதிலும் கை வைத்து விட்டனர். மே மாதம் ஆறாம் தேதி திமுக பதவி ஏற்ற பிறகு இதுவரை ராஜபாளையத்திற்கு மண்ணெண்ணெய் வரவில்லை.
அடுத்து திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் கிடைத்ததை சுருட்ட வேண்டும் என்ற மனநிலைக்கு திமுகவினர் வந்துவிட்டனர். நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஒரு மூடைக்கு 40 ரூபாய் லஞ்சம் கொடுக்கின்றனர். நியாயவிலைக்கடை ஊழியர்களை மிரட்டி திமுகவினர் பணம் பெறுகின்றனர்.
நின்றால் வரி நடந்தால் வரி உட்கார்ந்தால் வரி என குலேபகாவலி படத்தில் வருவது போல் இருக்கிறது.திமுக ஆட்சியில் ஒவ்வொரு வரி உயர்வின் போதும் வருமான வரிசோதனை ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் மக்களுக்கு நல்லது செய்ய என்றாலும் அவரது குடும்பம் பெரியதாக இருப்பதால் அவரால் அதை செய்ய முடியாது. அதிகார மையம் அதிகமாக உள்ளது. கழக ஆட்சியில் அம்மா தலைமையில் கட்டுக்கோப்பாக ஆட்சி நடந்தது.
அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் கடவுளை வணங்குகின்றனர். அவர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் நோக்கில் அவர் நடந்து வருகிறார். அனைத்து மத கடவுள்களையும் வணங்குவதால் தான் இன்றும் நான் நிலைத்து இருக்கிறேன்.
ஆனால் ஸ்டாலின் அவர்கள் ஒரு மதத்தை மட்டும் குறிப்பிட்டு குற்றம் சாட்டி பேசுவார். ஆட்சியில் இருக்கும் வரை அதிகார போதையில் எதுவும் கண்ணுக்கு தெரியாது.
திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக இருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்ந்து சட்டமன்ற தேர்தலும் வரலாம். எது நடந்தாலும் உங்கள் உழைப்பை மதிக்க கூடிய நபர்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.


















