கோவை,
50 ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளையடித்த ஸ்டாலின் குடும்ப தமிழகத்தையே சூறையாடிக்கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார்.
கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சூலூர் சட்டமன்ற தொகுதியில் கருமத்தம்பட்டி சோமனூர் மெயின் ரோட்டில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சுல்தான் பேட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளருமான வி.பி.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முத்துக் கவுண்டன் புதூர் ஊராட்சி தலைவரும், வடக்கு ஒன்றிய கழகசெயலாளருமான விபி.கந்தவேல் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், ஒன்றிய கழக செயலாளரும், பீடம் பள்ளி ஊராட்சி தலைவருமான ஜி.குமரவேல், ஒன்றிய செயலாளர் அப்புசாமி, நகர செயலாளர் ஆதவன் கே.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இக்கூட்டத்தில் கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை கொண்டாட தகுதி உள்ள ஒரே இயக்கம் அதிமுக தான். அன்றைய காலகட்டத்தில் மிட்டா மிராசுதாரர்களும் மட்டுமே சாகும் வரை எம்எல்ஏ ஆகவும். அமைச்சராகவும் இருக்க முடியும். அன்றைய காலகட்டத்தில் சாதாரண மக்களுக்கு உயர் பதவிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் பேரறிஞர் அண்ணா, திமுகவை தொடங்கினார். அண்ணா தொடங்கிய திமுக இன்று கருணாநிதிக்கும், அவரது வழித்தோன்றல்களுக்கும் கிடைத்து ஏழை மக்களை பாழடித்து வருகிறது.
அண்ணாவின் கொள்கையை கொண்டு ஆரம்பித்த புரட்சித்தலைவரின் அதிமுக ஏழை மக்களுக்காக ஆட்சி நடத்தியது.
புரட்சித்தலைவி அம்மா அவர்களும் அவரது வழியில் எடப்பாடியார் அவர்களும் தமிழக மக்களுக்கு ஆட்சி செய்த காலம் பொற்காலம்.
எடப்பாடியாரின் ஆட்சி மூன்று மாதத்தில் கவிழ்ந்து விடும் ஆறு மாதத்தில் கவிழ்ந்து விடும். குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று ஸ்டாலின் முயற்சித்தார். ஆனால் நான்கரை ஆண்டு காலம் எண்ணற்ற திட்டங்களை தந்து சிறப்பான ஆட்சியை விவசாயி எடப்பாடியார் நடத்தினார்.
அதற்குப்பிறகு பொய்யான வாக்குறுதிகளை கூறிய ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆன பிறகு இன்று எல்லாமே தலைகீழாகி விட்டது. ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் கடந்த 15 மாதங்களில் தமிழகத்திற்கு என்ன செய்தார். நாம் கொண்டு வந்த திட்டங்களைத் தானே ரிப்பன் விட்டு திறந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் கழக ஆட்சியில் சூலூர் தொகுதிக்கு மட்டும் சுமார் 460 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். இத்தொகுதிக்கு திமுக ஏதாவது நிறைவேற்றி உள்ளதா?
எதுவுமே செய்யாத விளம்பர அரசை ஸ்டாலின் நடத்திக்கொண்டிருக்கிறார். காலையில் ஒரு சூட்டிங் மாலையில் ஒரு சூட்டிங் என ஸ்டாலின் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார். இப்படியொரு மோசமான ஆட்சியை யாருமே இதுவரை நடத்தியதில்லை.
சூலூர் தொகுதிக்கு மட்டுமல்ல. கோவை மாவட்டத்திற்கு 50 ஆண்டு காலம் காணாத வளர்ச்சியில் தந்துள்ளோம் என நெஞ்சை நிமிர்த்தி எங்களால் சொல்ல முடியும். ஸ்டாலினால் கூற முடியுமா?
நெசவாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்தோம். ஆனால் இன்று அவர்கள் திமுக ஆட்சியில் வாழ முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். விசைத்தறியாளர்களின் பிரச்சினைகளை பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டுள்ளோம். ஆனால் இன்றைய திமுக அவர்களை கண்டு கொள்வதே இல்லை.
விசைத்தறியாளர்களின் பாதுகாப்பை திமுக தலைவர் ஸ்டாலின் குழி தோண்டி புதைத்து விட்டார். விசைத்தறியாளர்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். கவலைப்படாதீர்கள். மின் கட்டணத்தை குறைக்க துணை நிற்போம்.
தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாத ஒரு முதல்வராக ஸ்டாலின் உள்ளார். தேர்தல் வாக்குறுதியில் ஸ்டாலினும், உதயநிதியும் ஒரே கையில் நீட் தேர்வு ரத்து என்றார்கள். இவர்களை நம்பி ஏமாந்த 15க்கு மேற்பட்ட மாணவி மாணவிகள் உயிரிழந்து உள்ளனர். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத ஸ்டாலினை அவர்களே சூப்பர் முதல்வர் எனக் கூறிக் கொள்கின்றனர்.
இந்த ஆட்சி இன்று நடந்து கொண்டு இருக்கிறது என்றால் காரணம் பத்திரிகை துறை தான். திமுக வின் அலங்கோல ஆட்சியை வெளிப்படுத்தினாலே திமுக ஆட்சி காணாமல் போய்விடும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டாலும் கூட அவர் தமிழக மக்களுக்காக பரிசுகளை தந்து கொண்டிருக்கிறார்கள். அதில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என அடுத்தடுத்து வரிகளை உயர்த்தி மக்களை பெருஞ்சுமையை ஏற்றி விட்டனர்.
கழக ஆட்சியில் கூட வரிகளை உயர்த்த வேண்டியிருந்தபோது எடப்பாடியார் அவர்கள் கொரோனா களத்தில் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார் என வரியை ஏற்றவில்லை. கொலுசை காட்டி வெற்றி பெற்ற திமுகவினரை இப்போது எங்காவது பார்த்திருக்கிறீர்களா? இனி வருவார்கள். பாராளுமன்ற தேர்தலுக்காக கொலுசை கொடுத்தது போல வேறு ஏதாவது கொடுப்பார்கள். கவனமாக இருங்கள்.
தி.மு.க ஆட்சியில் ஒரு சாலை கூட போட முடியாத வக்கில்லாத அரசாக ஸ்டாலின் அரசு இருக்கிறது. மழை
காலத்தில் குண்டும் குழியுமான ரோட்டில் பயணம் செய்ய முடியுமா? கழக ஆட்சியில் சாலைப்பணிகளை மேற்கொள்ள நாம் கொண்டு வந்த 500 டெண்டர்களை திமுக அரசு ரத்து செய்துள்ளது. அரசு அதிகாரிகளையும், காவலர்களையும் கொண்டு அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதும் மட்டும் தான் தி.மு.க.வின் வேலை.
என் வீட்டில் மூன்று முறை சோதனை மேற்கொண்டு விட்டனர். என்ன கிடைத்தது. ஏராளமான பொய் வழக்கு போட்டு எங்களை பழிவாங்க துடிக்கிறார் ஸ்டாலின். அம்மா அவர்கள் எங்களை சிங்கம் போல் உருவாக்கியிருக்கிறார்.
இந்த வழக்குகளுக்கெல்லாம் நாங்கள் பயப்படுவோமா? சட்டமன்றத்தில் தேர்தலின் போது யாரை விட்டாலும் என்னை மட்டும் விட மாட்டேன் என்று சபதமேற்றவர் தானே ஸ்டாலின். இதற்கு பயப்படுவோமா.
பத்திரிகைகளையும் டிவிகளையும் நீதிமன்றங்களையும் மிரட்டும் ஒரு அராஜக அரசாக திமுக இருக்கிறது. எங்கள் மீது பொய் வழக்கு போடும் ஸ்டாலினே, கடந்த 15 மாதங்களில் மட்டும் ஸ்டாலின் குடும்பம் 50 ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளை அடித்துள்ளது. எங்கே பார்த்தாலும் லஞ்சம். லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறாது.
தமிழகத்தையே சூறையாடி கொண்டிருக்கிறது ஸ்டாலின் குடும்பம். ஓவராக ஆடாதீர்கள். உங்கள் ஆட்சிக்கு முடிவு வரும். பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் வெல்வோம். சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேல் தொகுதிகளில் வெற்றிபெற்று எடப்பாடியார் மீண்டும் முதல்வராக அரியணையில் அமர்வார்.
இவ்வாறு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேசினார்.


















