திருச்சி
விடியா தி.மு.க. ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என்றும், எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க சபதம் ஏற்போம் என்றும் முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி ஆவேசமாக பேசினார்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதி, காட்டுப்புத்தூரில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் என்.பிரகாஷவேல் தலைமை வகித்தார். பேரூராட்சி கழக செயலாளர் கே.ஆர்.ராமச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி பேசியதாவது:-
புரட்சித்தலைவி அம்மாவும் சரி, அண்ணன் எடப்பாடியாரும் சரி மக்களுக்கு தேவையான முத்து, முத்தான திட்டங்களை தேர்ந்தெடுத்து வழங்கினர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு பிறகு தமிழகத்தில் மக்களிடம் நன்மதிப்பு பெற்றுள்ளார் எடப்பாடியார்.
ஆனால், விடியா அரசின் முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை மக்களுக்கு தேவையான எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இப்பொழுது தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு காலம் ஆகின்றது.
இன்னும் மூன்றரை ஆண்டு காலம் இருக்கின்றது என்று தி.மு.கவினர் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும் சூழ்நிலையை தி.மு.கவினரே உருவாக்கி விட்டனர். ஆகவே, இந்த விடியா தி.மு.க அரசு விரைவில் வீட்டுக்கு செல்வது உறுதி.
எனவே, வருகின்ற பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அண்ணன் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கருத்துவேறுபாடுகளை மறந்து செயல்பட்டால் மீண்டும் தமிழ்நாட்டு முதலமைச்சராக எடப்பாடியார் வருவது வெகு தூரம் இல்லை என்பதை உறுதியோடும், உவகையோடும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த இயக்கத்தில் இருந்த, இருக்கின்ற சிலர் தன் சுயநலத்திற்காக, தன் குடும்ப நலத்திற்காக, பிரச்சனைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.
மிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலேயே ஏன்? உலக வரலாற்றிலேயே ஒரு இயக்கம் இரண்டாக பிளவுபட்டு மீண்டும் ஒன்றுபட்டு மீண்டும் ஆட்சியை பிடித்தது என்று சொன்னால் அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மட்டும் தான் என்பது வரலாறு.
எனவே, எத்தனை ஸ்டாலின் வந்தாலும், தி.மு.க குடும்பமே திரண்டு வந்தாலும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கழகத்தை ஆட்டிப்பார்க்கவோ, அசைத்து பார்க்கவோ முடியாது.
எனவே, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நல்லாட்சியை நான்கரை ஆண்டு காலம் தமிழக மக்களுக்கு தந்த எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க அனைவரும் ஒற்றுமையாக இருந்து உழைப்போம் என்று சபதம் ஏற்போம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி பேசினார்.


















