கோவை,
டெல்லி சென்று திரும்பிய கழக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்லியில் நானும் முன்னாள் அமைச்சர்களான எஸ்பி.வேலுமணி. சிவி.சண்முகம் ஆகியோர் உள்துறை அமைச்சரை அவரின் அலுவலகத்தில் சந்தித்து பேசினோம். அப்போது அவரிடத்தில் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்தோம்.
அம்மாவின் அரசு இருக்கின்ற போது, நான் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் பிரதமரிடம் கோதாவரி-காவிரி நதி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அந்த கோரிக்கையை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
அதோடு அம்மாவின் அரசு இருக்கின்றபோது,பிரதமரை சந்திக்கும் போது எல்லாம் காவிரி நதிநீர் மாசுபடுவதை தடுத்து நிறுத்துகின்ற விதமாக நடந்தாய் வாழி காவிரி திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரை கேட்டுக்கொண்டதற்குகிணங்க இரு அவைகளில் நடைபெற்ற கூட்டத்தின் போது குடியரசுத்தலைவர் உரையில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாசகம் இடம்பெற செய்தார். அதையும் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினோம்.
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் போதை பொருள் அனைத்து பகுதியிலும் தடையில்லாமல் கிடைக்கிறது. இது தடுத்து நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கஞ்சா போதைப்பொருள்களால் மாணவர்களும் இளைஞர்களும் சீரழியக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை வலியுறுத்தினோம்.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு.
கேள்வி : திமுகவிலிருந்து முக்கிய தலைவர் எல்லாம் விலகி வருகிறார்களே. இது குறித்து உங்கள் கருத்து என்ன
பதில் : இதுதான் 16 மாத திமுக ஆட்சி. திராவிட மாடல் என்று சொல்லி வருகிறார்கள் அல்லவா. அந்த கட்சியிலிருந்து ஒவ்வெருவராக விலகுவது தான் திராவிட மாடல்.
கேள்வி : ஆ.ராசா பேசியது குறித்து உங்கள் கருத்து
பதில் : ஏற்கனவே நான் ஆ.ராசா பேசிய பேச்சுக்கு உரிய பதில் கொடுத்துள்ளேன்.
அவர் கீழ்த்தரமான, இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக பேசுவது உண்மையாக கண்டிக்கப்பட வேண்டிய வார்த்தை. அதோடு ஏற்கனவே நான் பொதுக்கூட்டத்திலே பேசினேன். அவர் குறிப்பிட்ட அந்த வார்த்தை அவரது கட்சி தலைவரின் குடும்பத்துக்கு பொருந்துமா?
அதோடு அவரின் தலைவர், மருமகன் திருச்செந்தூரில் யாகம் நடத்தினாரே அவருக்கும் பொருந்துமா என்று கேட்டேன். அந்த கட்சி தலைவர் தான் இதற்கு உரிய பதிலை அளிப்பார் என்று எதிர்பார்த்தேன். இதுவரை பதில் கிடைக்கவில்லை.
கேள்வி: ஆ.ராசாவை கண்டித்து நடைபெற்ற பந்த் குறித்து
பதில்: இதுகுறித்து முழுமையாக தெரியவில்லை. இருந்தால் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த பந்த் வெற்றியாக முடிந்தது என்று சொல்லியுள்ளார்கள்.
கேள்வி: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஏதாவது பேச்சு வார்த்தை நடைபெற்றதா.
பதில் : இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வரும்போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள். நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருக்கும் போது அதைப்பற்றி பேசினால் அது வழக்கிற்கு தடையாக இருக்கும்.
கேள்வி: டெல்லிக்கு சென்றதே சமாதானம் பேசுவதற்காகத்தான் என்று சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளதே
பதில் : தவறான கருத்து. எதிர்க்கட்சிகள் எது வேண்டுமானாலும் பேசுவார்கள். திமுக ஆட்சியில் மக்களுக்கும் எந்தவிதமான நன்மைகளும் கிடைக்கவில்லை. எந்த பெரிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. இன்றைக்கு கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்பு திட்டம் என்பது நீண்ட கால திட்டம். விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கும் திட்டமாகும். வறண்ட பகுதியில் உள்ள மக்களுக்கு இத்திட்டம் நிறைவேறினால் தடையில்லாமல் நீர் கிடைக்கும். ஏற்கனவே பாரத பிரதமரிடம் கோரிக்கை வலியுறுத்தியுள்ளோம். அதை நினைவூட்டும் விதமாகவே மத்திய உள்துறை அமைச்சரையும் வலியுறுத்தினோம்.
கேள்வி : தமிழகத்தில் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கேட்டு வருகிறார்களே
பதில்: காய்ச்சலை தடுப்பது அரசினுடைய கடமை. இது எளிதாக பரவக்கூடிய காய்ச்சலாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே இந்த அரசு விழிப்போடு இருந்து மக்களை காக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ குழுக்கள் இதனை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
பேட்டியின் போது கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, மாவட்ட கழக செயலாளர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ, அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளர்கள் செ.தாமோதரன் எம்எல்ஏ, ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, ஒன்றிய செயலாளர் விபி.கந்தசாமி எம்.எல்.ஏ, கழக இளைஞரணி துணை செயலாளர் டிகே.அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சரும், கழக கொள்கை பரப்பு துணை செயலாளருமான செ.ம.வேலுசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.


















