திருவண்ணாமலை
அம்மா பெயரில் செயல்பட்ட அத்தனை திட்டங்களையும் இன்றைய விடியா அரசு முடக்கியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம், ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செங்கம் ராஜ வீதியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு செங்கம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மகரிஷி மனோகரன், தலைமை தாங்கினார்.
செங்கம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அருணாச்சலம், தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜா (எ)வி தேவராஜ், தண்டராம்பட்டு மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.கார்த்திகேயன், ஜமுனாமரத்தூர், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.சி.அசோக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வலையாம்பட்டு பி.சங்கர் அனைவரையும் வரவேற்றார்.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை செயலாளரும், தெற்கு மாவட்ட கழக செயலாளரும், போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கழக செய்தி தொடர்பாளரும், நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியருமான பேராசிரியர் ச.கல்யாணசுந்தரம் ஆகியோர் வழங்கினர்.
இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-
கழகத்தினுடைய பொதுச்செயலாளர் தொண்டர்களின் இமயமாக தொண்டர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இன்றைக்கு கழகத்தின் ஒற்றை தலைமையாக பொறுப்பேற்று கடந்த இரண்டு மாத காலமாக, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூறாவளியில், சட்ட நீதியாக எதிரிகளின் உடைய சூழ்ச்சிகளையும் எதிரிகளின் பல்வேறு நிலையான அரசியல் சூதாட்டங்களையும், தவிடு பொடியாக்கி சட்ட நீதியாக கழகத்தின் ஒற்றை எடப்பாடியார் என்பதை இன்றைக்கு நிரூபணம் செய்யும் வகையில் எடப்பாடியார் தலைமை சிறப்பான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
ஆட்சி அதிகாரத்தில் கழகம் இல்லை என்றாலும் கூட மக்களுக்காக மக்கள் சொல்கின்ற கோரிக்கைகளை போராட்ட களத்தில் இறங்கி மக்களுக்காக போராடும் இயக்கம் கழகம். நாட்டு மக்கள் மறந்துவிட முடியாது இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற திமுக 16 மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று சொன்னார்கள் தந்தார்களா.
தமிழகத்தில் இருக்கின்ற மாணவ மாணவிகள் படித்த கல்வி கட்டணங்களை தள்ளுபடி செய்வோம் என்று சொன்னார்களே செய்தார்களா?. கல்வி கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று சொன்னார்களே செய்தார்களா. ஏழை தாய்மார்கள் விவசாயிகள் வாங்கிய நகைக்கடைகள் அனைத்தும் தள்ளுபடி செய்வோம் என்று சொன்னார்கள் செய்தார்களா?
48 லட்சம் விவசாயிகளின நகை கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்வோம் என்று சொன்னார்களே சொன்னபடி செய்தார்களா? ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு 37 நிபந்தனைகளை விதித்து 13 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே எங்களால் வழங்க முடியும் என்று சொல்லி 35 லட்சம் விவசாயிகளுக்கு பட்டை நாமம் போட்டவர்கள்.
அதேபோல நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள். எங்களுடைய முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்கள். ஆனால் செய்யவில்லை. தமிழகத்தில் 15 மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். சொன்ன வாக்குறுதிகளை உங்களால் நிறைவேற்ற முடியவில்லை.
புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் எடப்பாடியாரால் பல்வேறு திட்டங்கள் இன்றைக்கு முடக்கப்படுகிறது. புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம் ஏழை தாய்மார்களுக்கும் எட்டு கிராம் தங்கம் தந்தார்கள். பட்டம் படித்த மாணவிகளுக்கு 50 ஆயிரம் ரூபாயும் பிளஸ்2 படித்த மாணவிகளுக்கு 4 கிராம் தங்கம் 25,000 ரூபாயும், திருமண நிதி உதவி திட்டத்தை தந்தார்கள். அந்த திட்டத்தை இந்த திமுக அரசு முடக்கி விட்டது.
கிராமந்தோறும் கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளை மூடி விட்டார்கள் அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட் திட்டத்தையும் மூடி விட்டார்கள். அம்மா பெயரில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தோமோ அத்தனை திட்டங்களையும் மூடி விட்டார்கள்.
எடப்பாடியார் கடந்த நான்கரை ஆண்டு காலமாக பல்வேறு துறைகளின் மூலமாக தன்னுடைய நிர்வாக திறமையின் காரணமாக மத்திய அரசின் மூலமாக 196 விருதுகளை இந்திய துணை கண்டத்திலேயே வாங்கிய ஒரே முதலமைச்சர் எடப்பாடியார் என்பது நாட்டு மக்கள் மறந்து விடவில்லை. குடிமராமத்து திட்டத்தின் மூலமாகஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அனைத்து நீர் நிலைகள் தூர் வாரியத்தின் காரணமாக இன்று தமிழகம் நீர் மிகை மாநிலமாக திகழ்கிறது.
இன்றைக்கு மின் கட்டணம் உயர்வு சொத்து வரி உயர்வு குடிநீர் கட்டணம் உயர்வு தொடர்ந்து பல்வேறு கட்டணங்களை உயர்த்தி இருக்கிற திமுக அரசு.தேர்தல் நேரத்தில் சொன்ன திமுக பெட்ரோல் டீசல் விலையை ஆட்சிக்கு வந்தவுடன் குறைக்கவில்லை. நிர்வாக திறமையற்ற அரசு தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது.அவர்களின் அவலட்சணங்களை மக்கள் மத்தியில் தமிழகம் எங்கும் ஒரு கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
மக்களின் மனநிலையை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக கழக முன்னணி தலைவர்கள் மீதும் முன்னாள் அமைச்சர்கள் மீதும் தொடர்ந்து பொய் வழக்கு போட்டிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது மூன்று முறை லஞ்ச ஒழிப்பு துறை மூலமாக அவர்களுடைய வீடுகள் அலுவலகங்கள் அவருக்கு வேண்டப்பட்டவர்கள் என்று ஏறக்குறைய நூறு இடங்களுக்கும் மேலாக மூன்று முறை சோதனை செய்து இதுவரை எந்த ஆவணங்களையும் கைப்பற்ற முடியவில்லை . எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்று எடப்பாடியார் சொல்லி இருக்கிறார். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் சட்டத்தின் மூலமாக சட்டரீதியாக அவைகளை தவிடு பொடியாக்குவோம்.
செங்கம் அருகே இருக்கின்ற ஜமுனாமருதூர் மலைவாழ் மக்கள் வாழ்கின்ற இடத்தில் கடந்த மாதம் முன் போடப்பட்ட ரூபாய் ஒரு கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் அந்த பகுதி மக்கள் தங்களுடைய கைகளிலே போடப்பட்ட சாலையினை பெயர்த்து அனைத்து தொலைக்காட்சி வாயிலாக காண்பித்தார்கள். இந்த தரமற்ற தார்சாலை அமைத்த காண்ட்ராக்டர் மீது இந்த அரசு, மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவர்கள் இந்த செங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரின் உறவினர்கள். என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையா. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் நடைபெற அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது.
மீண்டும் அம்மாவின் அரசு எடப்பாடியார் தலைமையில் அமைய இருக்கிறது. அம்மா அரசின் மூலமாக நீங்கள் செய்யும் தவறுகளுக்கு உரிய தண்டனையை பெறுவீர்கள் உறுதியாக சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
இவ்வாறு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை செயலாளரும், தெற்கு மாவட்ட கழக செயலாளரும், போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.


















