சென்னை
அம்மா அவர்களின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடைய வேண்டுமென்றால் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக கழக அரசு சட்டமாக்கியதற்கு தீபா, தீபக் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அது தான் அம்மாவிற்கு செய்கின்ற சிறப்பாக அது அமையும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து தெரிவித்து உள்ளார்.
சென்னை மாங்காடு பகுதியில் கழக உட்கட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை வழங்கிய பிறகு முன்னாள் அமைச்சரும், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் குறிப்பாக பொதுமக்கள், கழக தொண்டர்களுடைய வேண்டுகோள் அம்மா வாழ்ந்து மறைந்த இல்லம் என்பது எங்களை போன்றவர்களுக்கு திருக்கோயிலாகவும், அம்மா வாழ்ந்த இல்லம் என்பது வருங்கால சந்ததினருக்கு வெற்றி வீராங்கனையாக, சமூக நீதி காத்த வீராங்கனையாக பன்மொழி தன்மையாக என்கின்ற அவருடைய அறிவு, ஆற்றல், திறமை ஆகியவை அவர்களுக்கு தெரிய வேண்டும்.
எனவே அவர்களை பற்றிய முழுமையான வரலாற்றை எடுத்து அளிக்கின்ற இல்லம் என்கிற வகையில் பொதுமக்கள் மற்றும் கழகத்தினர் எண்ணத்திற்கு செயல் வடிவம் தரும் வகையில் அதனை நினைவில்லமாக்க சட்டமாக்கி திறக்கப்பட்டது.ஆனால் அதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் தற்போது ஒப்படைத்துள்ளார்கள்.
இணை ஒருங்கிணைப்பாளர் தன்னுடைய பேட்டியில் குறிபிட்டது போல கழகத்தின் நிலை என்பது அம்மா வாழ்ந்த மறைந்த இல்லத்தை நினைவு இல்லமாக இருக்க வேண்டும். இதற்கு மேல்முறையீடு செய்ய சட்டவல்லுனர்களோடு ஆலோசனை செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கருத்தை தெரிவித்தார். இதுதான் கழகத்தின் நிலை.
அம்மா அவர்கள் சரித்திர சகாப்தம். அந்த சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடைய வேண்டும் என்றால் அந்த வகையில் தான் அம்மா அவர்கள் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக அம்மாவின் அரசு சட்டமாக்கியது. அதற்கு தீபா, தீபக் முழு ஒத்துழைப்பு கொடுப்பதன் மூலம் தான் அம்மாவிற்கு செய்கின்ற சிறப்பாக அது அமையும்.
இதில் அவர்களை பொறுத்தவரை பெருந்தன்மையோடு, முழுமையாக அம்மாவின் வரலாற்றை அடுத்த தலைமுறையினர் அறியும் வகையிலே சரித்திரம் பேசப்பட வேண்டும் என்ற அளவிற்கு அவர்கள் முழுமையான ஒத்துழைப்பு தருவது தான் சிறந்த தீர்வாக இருக்க முடியும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.


















